Tuesday, November 30, 2010

இனிமேல் எனக்குப் பரிசு தராதே!

'உனக்கென்று தனியாக தலையணை வைத்துக் கொள். என் தலையணையை எடுக்காதே!" என்று நான் சொன்னதுதான் தாமதம்... உன் கண்ணில் நீர் முட்டிக் கொண்டுவிட்டது. 'ஏன் இப்படிப் பிரித்துப் பேசுகிறீர்கள்?' என்றாய். 'பிரித்தெல்லாம் பேசவில்லை. உனக்கென்று நீ தனியாகத் தலையணை வைத்துக் கொண்டால், நீ ஊருக்குப் போயிருக்கும் நாட்களில், உன் தலையணையை நீ என்று நினைத்துக் கட்டிக்கொண்டு தூங்கலாம். அதற்குதான்!' என்றேன். நீ தாவி வந்து என்னைக் கட்டிக்கொண்டு, 'ஒரு நிமிஷம்... நான் துடிதுடித்துப் போயிட்டேன், தெரியுமா!' என்றாய்.

காதல் அப்படிதான்... துடித்துக் கொண்டிருக்கிற இதையத்தைத் துடித்துக்க வைத்துவிடும்!

'நமக்கு கல்யாணம் நடக்கிற நாளில், அம்மி மிதித்து அருந்ததி பார்க்கச் செல்லும்போது, நான் உன்னைத்தான் பார்ப்பேன்' என்றேன். 'ஏன்.. என் முகத்திலா அருந்ததி இருக்கிறது?' என்றாய். 'இல்லை... அருந்ததியே உன் முகமாக இருக்கிறது!" என்றேன். நீ சிரித்துவிட்டு, 'அப்ப நான் மட்டும் வானத்தைப் பார்க்கணுமா?" என்றாய்.

'வேண்டாம்... வேண்டாம்... சீர் வரிசையில் கண்ணாடி இருக்கும் இல்லையா, அதை எடுத்துக் காட்டுகிறேன். அதில் உன் முகத்தையே நீயும் பார்த்துக்கொள்' என்றேன்.

'ம்ம்ம்... கூடியிருப்பவர்கள் சிரிக்க மாட்டார்களா?' என்றாய். 'சிரிக்கட்டுமே... அதைவிடச் சிறந்த வாழ்த்தொலி எது!' என்றேன். 'சடங்கில் இப்படியெல்லமா விளையாடுவது?' என்றாய்.

'சடங்கே ஒரு விளையாட்டுத்தானே!" என்றேன்.

உன் பிறந்த நாளையும் 
பிறந்த நேரத்தையும்
காட்டுகிற ஒரு கடிகாரம்
என் அறையிலிருக்கிறது.

'கடிகாரம் ஓடலியா' - என
யாராவது கேட்டால்
சிரிப்புத்தான் வரும்

அது காலக் கடிகாரம்  அல்ல
என் காதல் கடிகாரம்!

'என் பிறந்த நாளுக்காக நீ வாங்கித் தந்த பரிசுப் பொருளைப் பிரித்துப் பார்க்கக்கூட விருப்பமில்லை எனக்கு. அதை நீயே திரும்ப எடுத்துக்கொண்டு போய்விடு. இனிமேல் எப்போதும் எனக்கெந்த பரிசும் நீ தராதே!' என்றேன்.

கலங்கிப் போனாய். 'எவ்ளோ ஆசையா வாங்கிட்டு வந்தேன் தெரியுமா? இதைப் போய் வேணாங்கறீங்களே... ஏன், என்னைப் பிடிக்கலியா?' என்றாய் உடைந்த குரலில்.

'உன்னைப் பிடித்திருப்பதுதான் பிரச்சனையே! என் எல்லாப் பிரியத்தையும் நான் உன் மீதே வைத்திருப்பதால், நீ பரிசளித்தது என்பதற்காக எந்தப் பொருளின் மீதும் என்னால் பிரியம் வைக்க முடியாது.

உண்மையில், உன் மீது நான் வைத்திருக்கும் பிரியமே போதுமானதாக இல்லை எனக்கு. உன் மீது வைக்க இன்னும் கொஞ்சம் பிரியம் கிடைகதா என்று நான் ஏங்கிக்கொண்டிருக்கையில், நீ ஒரு பொருளை எனக்குப் பரிசளித்தால் அதை எப்படி வாங்கிக் கொள்ள முடியும், சொல்.

எனக்கு எதாவது பரிசு தந்தே ஆகவேண்டும் என்று உனக்குத் தோன்றினால், ஒரு முத்தம் கொடு!' என்றேன்.

'அது மட்டும் என்ன அப்படி உசத்தி?' என்றாய்.

'ஆமாம். உசத்தித்தான்! முத்தத்தைவிட சிறந்த பரிசை காதல் இன்னும் கண்டுப்பிடிக்கவில்லை!'.
                                                                   - தபு ஷங்கர் 
  

No comments:

Post a Comment

You may also like