Friday, April 29, 2011

ஐயையோ ரிசல்ட்..!

பரீட்சை அப்டீங்கற விஷயத்தை கண்டுபிடிச்ச புண்யவான் யாருன்னு தெரியலை.. தெரிஞ்சா, 108 தேங்காய் உடைக்கணும் - அவர் தலை மேல.!
பின்ன என்ன சார்.. பரீட்சைன்னு ஒண்ணு வெச்சா, ரிசல்ட்ன்னு ஒண்ணு வந்து தொலைக்குது.. எந்த பயத்தையும் விட இந்த ரிசல்ட் பயம் தான் பெரிய பயமா இருக்கு..!

பத்தாங்கிளாஸ்.. அதாங்க, எஸ்.எஸ்.எல்.சி-க்கு போனவுடனே, ஆளாளுக்கு 'பப்ளிக் எக்ஸாம்' 'பப்ளிக் எக்ஸாம்'னு நமக்கு பிரஷரை ஏத்துவாங்க.. வீட்ல நிம்மதியா கதை புக் படிக்க முடியாது, டிவி பாக்க முடியாது.. அட, ஒரு கல்யாணம், விசேஷம்னு யாராச்சும் கூப்பிட வந்தா, அவங்க கூட கொஞ்ச நேரம் பேசக் கூட விடமாட்டாங்க. படி படின்னு ஒரே ரோதணை. நாம படிச்சே தீரணும்னு ஒரு கூட்டமே நமக்கு எதிரா திரண்டிருக்கும்.
பரீட்சை நேரத்துல ஏற்கனவே பயந்து இருக்க நமக்கு, அட்வைஸ் பண்றேங்கற பேர்ல ஆளாளுக்கு ஆடியோ பேதி மருந்து குடுப்பாங்க.. இந்த பாட புஸ்தகம் இருக்கே.. ஹப்பா.. எனக்கு அதை தொறந்த அஞ்சாவது நிமிஷம் கொட்டாவி வரும், ஆறாவது நிமிஷம் தூக்கம் வரும்.
எட்டாவது நிமிஷம் டீ வரும்.
அம்மா டீ குடுக்கும் போது அவங்களை பாத்தா பாவமா இருக்கும். நம்மளை என்னவோ 'உலகம் சுற்றும் வாலிபன்' எம்ஜியார் (சயின்டிஸ்ட் முருகன்!) லெவலுக்கு மதிச்சு, மாத்தி மாத்தி டீ போட்டு குடுத்துகிட்டே இருப்பாங்க.. அது என்னமோ, என்ன மாயமோ தெரியலை.. அந்த டீயை குடிச்சா இன்னும் நல்லா Fresh-ஆ தூக்கம் வரும்.

பரிட்சை நேரத்துல என்னைத் தவிர எல்லாரும் என் படிப்பு மேலயே அக்கறையா இருப்பாங்க.. பத்தாக்குறைக்கு டிவில வர்ற விளம்பரம், பத்திரிகைகள்ல வர கட்டுரை எல்லாமே படிப்பு.. படிப்பு.. படிப்பு பத்தி தான்.
எனக்கு ஒரு சந்தேகம்.. அது எப்படி பரிட்சை நேரத்துல மட்டும் இந்த பாழாப்போன ஜுரம் வந்து தொலைக்க மாட்டேங்குது.? சினிமா பாட்டு கேக்கணும்னு ஏன் அவ்ளோ ஆசையா இருக்குது?

ஒரு வழியா கடைசி பரிட்சைய எழுதி முடிச்சதும் மனசுக்குள்ள வந்த சந்தோஷம் இருக்கே.. ஹைய்யோ.. அடுத்த ஒரு மாசம் கிரிக்கெட், சினிமா, ஃபிரண்ட்ஸ்னு கலக்கலா போச்சு..
காலைல எழுந்து பசங்களோட ஜாகிங்.. வீட்டுக்கு வந்து டிபன், மைதானத்துக்கு போய் கிரிக்கெட், மறுபடியும் வீடு. குளியல். சோறு. கிளம்பி எவன் வீட்டுக்காவது போய் செஸ் இல்லாட்டி கேரம் போர்டு ஆடிகிட்டே அரட்டை, டிவி, பிரவுசிங் சென்டர், நொறுக்கு தீனி, மறுபடியும் கிரிக்கெட். 6.30 மணிக்கு மேல Flood Light மேட்ச் நடக்கற இடத்துக்கு போய் அலப்பறை. ஆஹா.. நிம்மதியா போய்கிட்டிருந்தது.

"பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.. வரும் மே மாதம்.. " ஐயையோ.. அதுக்குள்ள ரிசல்ட்டா..?! என்ன அவசரம்.. நல்லா பொறுமையா டயம் எடுத்து இன்னும் ஒரு ரெண்டு மூணு மாசம் கழிச்சு ரிசல்ட்டை வெளியிடலாமே..

நல்லா படிக்கற பசங்களுக்கு கவலை இல்லை.. கண்டிப்பா புட்டுக்கும்னு தெரிஞ்ச பசங்களுக்கும் கவலை இல்லை.. என்னை மாதிரி மதில் மேல் மியாவ் தான் இதுல அவஸ்தைபடறோம்.

இன்னும் பத்து நாள்ல ரிசல்ட் வரப் போகுதுன்னு தெரிஞ்ச உடனே, எனக்கு மனசு பக் பக்குனு அடிக்க ஆரம்பிச்சிடுச்சு.. "பாஸ் பண்ணிடுவ இல்லை.. ?"னு அப்பா கேக்கும்போது "கண்டிப்பா.."ன்னு பலவீனமா சொன்னேன். அப்பா என் கண்ணையே ஒரு 3 செகண்ட் பாத்துகிட்டு இருந்தார்.. ஒருவேளை அப்பாவுக்கு நாம கணக்கு பரிட்சை சரியா எழுதலைன்னு தெரிஞ்சிருக்குமோ..?
அப்பா நகர்ந்ததும் அம்மா வந்து, " நல்லா தானே எழுதியிருக்க.. பாஸ் பண்ணிடுவ இல்லை..? உங்க அத்தை ஏற்கனவே என்னை மதிக்க மாட்டா.. நீ பெயில் ஆயிட்டா உங்க அப்பா பக்கத்து உறவுக்காரங்களுக்கு ரொம்ப இளக்காரமா போயிடும்டா.." அதாவது, நான் பாஸ் பண்ணி ப்ளஸ் ஒன் போறது கூட முக்கியமில்லை.. உறவுக்காரங்க மத்தில தலைக்குனிவு வந்திடக் கூடாது..! என்ன உலகம்டா இது..!

மறுநாள் பேப்பர் படிச்சிட்டிருந்த அப்பா, கண்ணாடியை கழட்டி வெச்சுட்டு, பாத்ரூமுக்கு போயிருந்தார் போல.. நான் கண்ணாடியை பாக்காம, பேப்பரை அப்டியே எடுக்க, கண்ணாடி 'க்ளிங்' ஆயிடுச்சு..!

அப்பா வந்து உடைஞ்சிருந்த கண்ணாடியை பாத்தார்.. கண்ணாடி போடாத அப்பாவோட முகத்தைப் பார்க்க சிரிப்பாய் இருந்தது. என்னை முறைச்சது கூட பரவால்ல.. திட்டியிருந்தா கூட திருப்தியா இருந்திருக்கும்.. ஒண்ணும் சொல்லலை.. உடைஞ்ச துண்டுகளை ஒரு பேப்பர்ல எடுத்து போட்டுகிட்டு, " ரிசல்ட் வரட்டும்.."ன்னு சொல்லிட்டு போயிட்டார். கண்ணாடி உடையறதுக்குக்கும், என் ரிசல்ட்டுக்கும் என்ன சம்மந்தம்.. ? கண்ணாடியை உடைச்சதுக்கு திட்டித் தொலைக்க வேண்டியது தானே. ரிசல்ட் புட்டுகிச்சுன்னா, இதுக்கு சேத்து வெச்சு.. ஐயோ..!

கடவுளே.. நான் எப்படியாவது பாஸ் ஆகிடணும்.. இந்த ஒரு தடவை மட்டும் கொஞ்சம் ஹெல்ப் பண்ணு.. உன் உண்டியல்ல 10 ரூபா போடறேன்.

எங்க செட்ல யாரெல்லாம் பெயில் ஆவான்னு யோசிச்சு பாத்தேன்.. ம்ஹூம்.. சொல்ல முடியாது.. எல்லாருமே பாஸ் ஆனாலும் ஆயிடுவானுங்க.. நான் மட்டும் பெயில் ஆகி, மத்தவன் எல்லாம் பாஸ் ஆகிட்டா.. ஐயையோ.. அதுமட்டும் நடக்கக் கூடாது.. குறைந்தபட்சம், பக்கத்து வீட்டு மகேஷ் மட்டுமாவது பெயில் ஆயிடணும்..அவன் பிட் அடிச்சிருப்பானோ.. கடவுளே.. என்னை பாஸ் பண்ண வெக்க முடியாட்டி, அட்லீஸ்ட் எனக்கு கம்பெனி குடுக்க
மகேஷையும் பெயில் ஆக்கிடு.. 20 ரூபா டீலிங்..!

அதுக்கப்பறம் எந்த எதிர்மறையான வார்த்தைகள் காதுல விழுந்தாலும், அது என் ரிசல்ட்டை பத்தி ஞாபகப்படுத்திகிட்டே இருந்தது. 'போச்சு' 'வராது' 'இல்லை'ன்னு எல்லா வார்த்தைகளையும் மாத்தி மாத்தி யாராவது சொல்லிகிட்டே இருந்தாங்க.

பஸ்ல போயிட்டிருக்கும்போது, கோவில், சர்ச், மசூதி எதையும் விடலை.. என் ரிசல்ட்டுக்காக எல்லா சாமிகிட்டயும் சொல்லி வெச்சாச்சு.. என் கணக்கு பேப்பரை திருத்தும்போது, திருத்தரவருக்கு பைத்தியம் பிடிச்சு, நூத்துக்கு 80 மார்க் போடற மாதிரி பகல் கனவெல்லாம் கண்டேன்.. திட்டமிட்டு காணும் கனவு எல்லாம் பலிக்குமான்னு தெரியலை.

ரிசல்ட் வந்த அன்னிக்கு பசிக்கவே இல்லை.. அம்மா என்னை விடாம "சீக்கிரம் சாப்பிட்டுடு.."ன்னு வம்படியா சாப்பிட வெச்சாங்க.. அன்னிக்கு வீட்ல எல்லாரும் மந்திரிச்சு விட்ட கோழி மாதிரி இருந்தாங்க.. அப்பா ஆபிஸுக்கு போவாரா மாட்டாரான்னு சந்தேகமா இருந்தது.. கடவுளே.. அவர் கிளம்பி ஆபிஸ் போயிடணும்.. உண்டியல் அக்கவுண்ட்டில் இன்னும் ஒரு 5 ரூபாய் கூடியது.

ரிசல்ட் பேப்பர் இப்ப வரும்.. அப்ப வரும்னு அலைகழிய வெச்சிட்டாங்க.. பக்கத்து தெரு, அடுத்த தெருன்னு நாயா பேயா அலைஞ்சு, பேப்பரை வாங்கினா கை காலெல்லாம் நடுங்குது.

பேப்பர்ல நம்பரை தேட முடியலை.. கண்ல பூச்சி பறக்குது.. வயத்துல பட்டாம்பூச்சி பறக்குது.. பேப்பர்ல டுடோரியல் காலேஜ் விளம்பரம் எல்லாம் போட்டிருக்காங்க.. ஒரே அபசகுனமா இருக்குது..

என் நம்பர் சுத்தமா மறந்து போச்சு.. பேப்பரை தரைல விரிச்சு, அது மேலயே மண்டி போட்டு உக்காந்து, நம்பரை ஞாபகப்படுத்தி, கஷ்டப்பட்டு தேடிப் பாத்ததுல.. நம்பர் இல்லை.. இன்னொரு தடவை ஒழுங்கா பாக்கறேன்.. ம்ஹூம்.. இல்லை.. என்னமோ தெரியலை.. எல்லா டென்ஷனும் போய், நிம்மதியா இருந்தது..

நாம ஸ்டேட் ஃப்ர்ஸ்ட் மார்க் எதிர்பார்த்து அது வரலைனா வருத்தப்படலாம்.. பேப்பர்ல போட்டோ வர வேண்டாம் பாஸ்.. வெறும நம்பர் மட்டும் வந்தா போதும்னு பொன் செய்யும் மருந்தா மனசை வெச்சிருக்கோம்.. அதுக்கு கூட வழியில்லாம போயிடுச்சு..

திடீர்னு மகேஷ் வீட்லேந்து பயங்கரமா சத்தம் கேட்டது.. மகேஷை திட்டிகிட்டிருந்தாங்க.. ஆஹா.. அவனுக்கும் புட்டுகிச்சா..?! நன்றி நண்பா..!
மேட்டரை கன்ஃபர்ம் பண்ணிக்க மகேஷ் வீட்டு கிட்ட போனேன்.  " பக்கத்து வீட்டு பையனும் உங்கூட தானே படிக்கறான்.. அவன் பாஸ் பண்ணிட்டான்.. நீயும் இருக்கியே தண்டம்.. தண்டம்.. "

என்ன சொல்றாங்க.. நான் பாஸா.. ? எப்படி?

அட, ஆமா.. பதட்டத்துல என் நம்பருக்கு பதிலா மகேஷ் நம்பரை பேப்பர்ல தேடியிருக்கேன்.

பேப்பரை எடுத்து பார்த்ததுல, என் நம்பர் என்னைப் பார்த்து கண் அடிச்சுது.
அப்பா வீட்டுக்குள்ளேயிருந்து பயங்கர சந்தோஷத்துடன் வெளியே வந்து, முதுகைத் தட்டி விட்டு ஆபிஸுக்கு போனார். கண்ணாடி போடாத அப்பாவின் முகம் இப்ப அழகா இருந்தது.

மறுபடியும் மறுபடியும் பேப்பரை தரைல பரப்பி, என் நம்பரை பாத்துகிட்டே இருந்தேன்.

இப்ப நினைச்சு பாத்தா அந்த ரிசல்ட் டென்ஷன் இருக்கே, அதுவும் ஒருமாதிரி நல்லா தான் இருக்கு, இல்லை.!
-- விகடனிலிருந்து

Monday, April 25, 2011

தேவதையை கண்ட நாள்

முதன் முதலில் உன்னை சந்தித்த
அந்த நாளை நினைக்கையில்
என் பழைய நினைவுகள்
இப்பவும் புத்தம் புதிதாய்

உன்னை காணும் முன்
வழியெல்லாம் கற்பனைகள்
ஆயிரமாயிரம் ஆசைகள்- நீ
அறிந்திட வாய்ப்பில்லையடி

உன்னை பார்த்த பின்பும்
அறியாதவன் போலிருந்த- என்னை
எப்படியடி அடையாளம் கண்டாய்
நான் தான் உன்னவனென்று

நீ அழைத்த பின் பக்கம் வந்து
திருட்டு முழி விழித்து –உன்
அழகை ரசித்ததாலே
பசித்த வயிறும் பசி மறந்து போனதடி

தெற்றுப்பல் தெரிய செவ்விதழில்
நீ சிரிக்கையில் – என்
எண்ணங்கள் விண்ணில் மறைந்ததை
நீ எப்படியடி அறிவாய்

மறந்திடமாட்டிகளே என்று
வழியனுப்பிய போது
எனக்குள் உன்மீது கோபம்தான்
எப்படியடி உன்னால் கேட்க முடிந்தது

திரும்பும் வழியெல்லாம்
உன் நினைவுகள்
என் நினைவுகளை மட்டுமல்ல – என்
உயிரையும் உன்னிடம் தான் விட்டு வந்தேன்

இடையறா வேளைப்பளுவின்
இருக்கத்தை தளர்த்த கூட- உன்
உருவத்தின் பிம்பம் தேவையென்பதை
நீ எப்படியடி மறந்து போனாய்!

-- ஞானசேகர்



Wednesday, April 20, 2011

காதலி

உடம்பில் 
எதாவது ஓர் இடத்தில் 
அலகு குத்தியிருப்பவர்களை 
பார்த்திருக்கிறேன்
முதன் முறையாக
உடம்பு முழுவதும்
'அழகு' குத்தியிருப்பவளை
இப்பொழுதுதான் பார்க்கிறேன்...

-- வசந்த்


 

Friday, April 15, 2011

பாடல் : குவியமில்லா ஒரு காட்சிப் பேழை (கோ)

படம் : கோ
பாடல் : குவியமில்லா ஒரு காட்சிப் பேழை
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
இயக்கம் : கே வி ஆனந்த்
______________________________
என்னமோ ஏதோ
எண்ணம் திரளுது கனவில்
வண்ணம் பிறழுது நினைவில்
கண்கள் இருளுது நனவில்
என்னமோ ஏதோ
முட்டி முளைக்குது மனதில்
வெட்டி எறிந்திடும் நொடியில்
மொட்டு அவிழுது கொடியில்
ஏனோ
குவியமில்லா...
குவியமில்லா ஒரு காட்சிப் பேழை!
ஏனோ
உருவமில்லா...
உருவமில்லா நாளை!
ஏனோ
குவியமில்லா...
குவியமில்லா ஒரு காட்சிப் பேழை!
ஏனோ அரைமனதாய்
விடியுது என் காலை!
என்னமோ ஏதோ
மின்னிமறையுது விழியில்
அண்டிஅகலுது வழியில்
சிந்திச் சிதறுது வெளியில்
என்னமோ ஏதோ...
சிக்கித் தவிக்குது மனதில்
ரெக்கை விரிக்குது கனவில்
விட்டுப் பறக்குது தொலைவில்
ஏனோ குவியமில்லா
குவியமில்லா - ஒரு காட்சிப் பேழை!
ஏனோ உருவமில்லா
உருவமில்லா நாளை!
நீயும் நானும் எந்திரமா?
யாரோ செய்யும் மந்திரமா?
பூவே!
______________________
முத்தமிட்ட மூச்சுக் காற்று
பட்டுப் பட்டுக் கெட்டுப்போனேன்
பக்கம் வந்து நிற்கும் போது
திட்டமிட்டு எட்டிப் போனேன்
நெருங்காதே பெண்ணே எந்தன்
நெஞ்செல்லாம் நஞ்சாகும்
அழைக்காதே பெண்ணே எந்தன்
அச்சங்கள் அச்சாகும்
சிரிப்பால் எனை நீ
சிதைத்தாய் போதும்
______________
சுத்திச் சுத்தி உன்னைத் தேடி
விழிகள் அலையும் அவசரம் ஏனோ?
சத்த சத்த நெரிசலில் உன் சொல்
செவிகள் அறியும் அதிசயம் ஏனோ?
கனாக்காணத் தானே பெண்ணே
கண்கொண்டு வந்தேனோ?
வினாக்கான விடையும் காணக்
கண்ணீரும் கொண்டேனோ?
நிழலை திருடும்
மழலை நானோ?

-- மதன் கார்க்கி  


Thursday, April 14, 2011

தபு ஷங்கர் கவிதைகள்

அழகான பொருட்களெல்லாம்
உன்னை நினைவு படுத்துகின்றன.
உன்னை நினைவுபடுத்துகிறவை எல்லாமே
அழகாகத்தான் இருக்கின்றன.

"நான் எது கேட்டாலும் வெட்கத்தையே
தருகிறாயே...வெட்கத்தைக் கேட்டால்
என்ன தருவாய்?."

---
என்னை
உடைப்பதற்காகவே
என் எதிரில்
சோம்பல் முறிப்பவள் நீ
---

'ஒரு நிமிடத்தில்
உன்னைக் கடந்துபோகிற பெண்ணைப் பார்க்க
தினமும் ஒரு மணி நேரம் காத்திருக்கிறாயே' என்று
கேட்ட என் நண்பனிடம் சொன்னேன்...

'நீ கூடத்தான்
ஒரே ஒரு நாள் சம்பளம் வாங்குவதற்காக
ஒரு மாதம் முழுவதும் வேலை செய்கிறாய்!'
 ---
 
 

Friday, April 1, 2011

டேனியும் தில்லுதுரயும்

அன்று அலுவலகத்திலிருந்து மாலை அபார்ட்மென்ட்டுக்கு வந்த தில்லுதுர, தனது நாயை பார்த்ததும் அரண்டுவிட்டார்.

பக்கத்து வீட்டு சுட்டிப்பையன் டேனி பாசமாய் வளர்த்து வந்த கிளிக்குஞ்சை வாயில் கவ்வியபடி நின்றிருந்தது நாய்.

கிளியின் உடலை கவ்வியதோடு விடாமல், மண்ணில் போட்டு புரட்டி எடுத்து வந்திருந்தது நாய்.

பார்த்ததுமே தில்லுதுரக்கு தெரிந்துவிட்டது... கிளி கண்டிப்பாய் இறந்திருந்தது.

'நம்ம நாய் கிளிய கொன்னுடுச்சுனு தெரிஞ்சா இந்த டேனிப்பய நம்ம சும்மா விடமாட்டானே..!'

வேக வேகமாய் வெளியே வந்து பார்த்த தில்லுதுர கொஞ்சம்போல நிம்மதியடைந்தார்.

டேனியின் வீட்டில் எல்லோரும் எங்கேயோ போயிருந்தார்கள்.

யோசித்த தில்லுதுர நாயின் வாயிலிருந்த கிளியைப் பறித்து, பாத்ரூமுக்கு கொண்டு போய் ஷாம்பூ போட்டுக் கழுவி, ஹேர் ட்ரையரை எடுத்து அதன் ரெக்கை எல்லாம் காயவைத்து, வேகவேகமாய் ஃப்ளாட்டின் வாசலில் இருந்த, அதனுடைய கூண்டுக்குள்ளேயே திரும்பப் போட்டுவிட்டு வந்துவிட்டார்.

இனி யாராவது பார்த்தாலும், அது இயற்கையாய் அதனுடைய கூண்டிலேயே இறந்ததாய்த்தானே நினைப்பார்கள்.

தெளிவாய் செய்துவிட்டாலும், குற்ற உணர்ச்சியில் டேனியையோ, அவன் வீட்டு ஆட்களையோ ரெண்டு மூணு நாட்கள் பார்க்காமலேயே சுற்றிக் கொண்டிருந்தார் தில்லுதுர.

ஆனால், சனிக்கிழமை மாலை காரை கொண்டு நிறுத்தியபோதே வாசலில் விளையாடிக் கொண்டிருந்த டேனி, தில்லுதுரயைப் பார்த்து ஓடி வந்தான்.

"அங்கிள்... உங்களுக்கு தெரியுமா.? என்னோட கிளி ஸ்நூஃபி செத்துப்போச்சு..!".

பாசமாய் சொல்லும் டேனியின் முகத்தை பார்க்க முடியாமல் தில்லுதுர, வருத்ததுடன் சொன்னார்.

"அப்படியாடா... பாவம் ஸ்நூஃபி. என்னாச்சு..?".

தில்லுதுர கேட்டதும் டேனி கண்களை விரித்துக் கொண்டு ஆச்சர்யமாய் சொன்னான்.

"அங்கிள்... அது ஒரு நாள் கூண்டுக்குள்ளயே செத்துக் கிடந்தது அங்கிள். எனக்கு பயங்கரமா அழுகை அழுகையா வந்துச்சு. அப்பறம், அதை நானும் அப்பாவும் அதை எடுத்துட்டு போயி ஃப்ளாட்டுக்கு பின்னாடி தோட்டத்துல பொதச்சுட்டோம். அதுக்கு அப்பறம், அப்பா என்னையும் அம்மாவையும் சாப்பிட வெளிய கூட்டிட்டு போயிட்டாரு. திரும்பி வந்து பார்த்தா யாரோ ஸ்நூஃபிய பொதச்ச எடத்துலருந்து எடுத்து குளிப்பாட்டி, திரும்ப அதோட கூண்டுலயே கொண்டு வந்து போட்டிருந்தாங்க அங்கிள். ஸோ ஃபன்னி..!" என்றான் டேனி.

-- மின்மினி தேசம்

You may also like