Monday, September 23, 2013

நீ எதைக் கொண்டு வந்தாய்.. இழப்பதற்கு?

 
தலைசிறந்த பொருளாதார நிபுணரான ஆர்.கே.சண்முகம் செட்டியார் அவர்கள் தலைமையில் ஒரு சிறு சேமிப்புத் திட்ட ஆதரவு விழா, ராஜாஜி ஹாலில் நடைபெற்றது.

அந்த விழாவில் பேசிய கலைவாணர், ஒரு சந்தேகத்தை எழுப்பினார்.

"ஓர் ஓட்டலில் வந்து இறங்கிய பிரயாணி, கேஷியரிடம் 100 ரூபாய் நோட்டைக் கொடுத்து, ஊருக்குப் போகும்போது வாங்கிக் கொள்வதாகச் சொன்னார். கேஷியர் தர வேண்டிய பாக்கியைக் கேட்டு ஒரு மளிகைக் கடைக்காரர் வந்தார். உடனே, அந்த 100 ரூபாயை எடுத்து அவரிடம் தந்தார் கேஷியர்.

மளிகைக் கடைக்காரர் அந்த நோட்டை, தனக்கு சிகிச்சை அளித்த டாக்டருக்குத் தந்தார். மறுநாள் டாக்டர், ஒரு டீ பார்ட்டி வகையில் அந்த ஓட்டலுக்குத் தர வேண்டிய பாக்கிக்காக, அதே நோட்டை ஓட்டலுக்குக் கொடுத்து அனுப்பினார்.

அன்று மாலை, ஓட்டலில் தங்கியதற்கான பணத்தைத் தந்துவிட்டு, அதே 100 ரூபாய் நோட்டைத் திரும்ப வாங்கிக்கொண்டார் அந்தப் பிரயாணி. அப்போது கேஷியரிடம், 'இது ஒரு செல்லாத நோட்டு. செலவாணி ஆகிறதா என்று பார்ப்பதற்காகவே உங்களிடம் தந்தேன்' என்று சொல்லிக் கொண்டே, அந்த நோட்டைக் கிழித்தெறிந்தார். இதில் யாருக்கு நஷ்டம் என்பதைத் தலைவர் தெரிவிக்கவேண்டும்" என்றார் என்.எஸ்.கே.

"அதுதான் செல்லாத நோட்டு ஆயிற்றே! எனவே, யாருக்கும் நஷ்டம் இல்லை" என்றார் சண்முகம் செட்டியார்.

"அப்படியானால் ஓட்டல்காரர், மளிகைக் கடைக்காரர், டாக்டர் இவர்களுக்கெல்லாம் 100 ரூபாய் கடன் அடைந்திருக்கிறதே?" என்றார் கலைவாணர்.

அப்பொழுது தலைவர் சொன்னார்.. "இதற்குப் பெயர்தான் நாணயம் என்பது! அதன்மேல் வைக்கக்கூடிய மதிப்புதான் நாணயம். உண்மையாகப் பார்க்கப் போனால், நோட்டுக்குக் காகித விலைதான் உண்டு. அதற்கு நாம் 100 ரூபாய் மதிப்புக் கொடுக்கிறோம்" என்று கடினமான அந்த விஷயத்தை இலகுவாக விளக்கினார் செட்டியார்.

இந்தக் கருத்தைப் 'பணம்' என்ற படத்தில் கையாண்டார் கலைவாணர்.
-- விகடன்

Sunday, September 1, 2013

ஒரு 'பிட்டு' காதல் கதை

 
"அண்ணே! நீங்க எனக்கு கதை சொல்லி ரொம்ப நாள் ஆச்சு. எதாச்சும் சுவாரசியமான கதை இருந்தா சொல்லுங்கண்ணே"

"கதை சொல்றேன்! அது சுவாரசியமா இருக்கா, இல்லியான்னு நீதான் சொல்லணும்."

"சரி சொல்லுங்க"

"இது என்னோட காதல் கதை. இந்த கதை நடக்கும்போது நான் +2 படிச்சுக்கிட்டு இருந்தேன்."

"என்னது படிச்சீங்களா?"

"சரி +2 க்ளாஸ்ல தினமும் போய் உக்காந்துகிட்டு இருந்தேன். அப்போ என்னோட க்ளாஸ்ல ப்ரீத்தின்னு புதுசா ஒரு பொண்ணு வந்து சேந்தா. அழகுன்னா அழகு அப்படி ஒரு அழகு ஒரு பக்கம் இருந்து பாத்தா அப்பிடியே த்ரிஷா மாதிரி இருப்பா."

"அப்போ இன்னொரு பக்கம் இருந்து பாத்தா கமலா காமேஷ் மாதிரி இருப்பங்களாண்ணே."

"டேய்! மூடிகிட்டு கதையை கேளு."

"சரி சரி சொல்லுங்க. அந்த பொண்ணு வந்ததும் பசங்க கிளாஸ் கட் அடிக்கிறதே குறைஞ்சு போச்சு. எல்லாரோட கண்ணும் அந்த பொண்ணு மேலதான். நல்ல வேலையா எங்க பள்ளி கூடத்துல பசங்களும் பொண்ணுங்களும் பேசிக்க கூடாதுன்னு ரூல் இருந்ததால அவ தப்பிச்சா"

"புரியுது. ஈ மொய்க்காத பலா பழம் இருக்கா என்ன?"

"இப்பிடி வாழ்க்கை போய்க்கிட்டு இருக்கும்போதுதான் பள்ளிகூடத்தில ரிவிசன் டெஸ்ட் வந்துச்சு. பரீட்சை எழுதலாமுன்னு போனவனுக்கு பெரிய அதிர்ச்சி"

என்ன ஆச்சு

"புதுசா வந்த பொண்ணு பேரு என்னோட பேருக்கு அடுத்து வரதால அவளை என்னோட டெஸ்க்ல உக்கார வச்சுட்டாங்க"

"அது அதிர்ச்சியா? இன்ப அதிர்ச்சின்னு சொல்லுங்க"

மண்ணாங்கட்டி. வழக்கமா என் கிட்ட ஒரு பையன் உக்காந்து இருப்பான். நானும் அவனும்தான் பிட் ஷேர் செஞ்சுக்குவோம். இப்போ இவ கிட்ட இருந்தா "நான் எப்பிடி பாஸ் ஆகுறது."

"ஐயோ பாவம்!"

"கஷ்டம்தான்"

"ஒரு வழியா நானே கை வலிக்க பிட் எழுதி எல்லா பரீட்சையையும் சமாளிச்சிட்டேன். ஆனா கடைசி பரீட்சை பிசிக்ஸ். ரொம்ப கஷ்டமா கொஸ்டின் பேப்பர் செட் பண்ணிட்டாங்க"

"ம்"

"நான் எழுதிட்டு போன பிட்டை வச்சு என்னால அரை மணி நேரம் கூட தாக்கு பிடிக்க முடியல. லேசா திரும்பி அவளை பார்த்தேன். அவ கடகடன்னு எழுதிகிட்டே இருக்கா."

"ஆமா! பொண்ணுங்க எப்பவுமே நல்லா படிக்கும்ல."

"அப்படிதான் நானும் நெனச்சேன். இப்போ நான் எழுதி இருந்த பதிலை வச்சு கட்டாயம் பாஸ் பண்ண முடியாது. எனக்கு என்ன செய்றதுன்னே தெரியல. சூப்பர்வைசர் அசந்த நேரமா பாத்து லேசா பெஞ்சை தட்டி அவளை திரும்பி பாக்க வச்சேன்."

"ஆகா! அண்ணல் நோக்கியதை அண்ணியும் நோக்குறாங்க போல"

"அவ திரும்பினதும் அவ கிட்ட லேசா பேப்பரை காட்டேன்னு சிக்னல் பண்ணேன்."

"பேப்பரை காட்டேன்னுதான சிக்னல் பண்ணீங்க"

"ஆமா! பேப்பரைதான்"

"காட்டுனாங்கள"

"காட்டுனா"

"அப்போ அவங்க புண்ணியத்துல பாஸ் ஆகிட்டீங்கன்னு சொல்லுங்க"

"கிழிச்சேன். பேப்பர் முழுக்க ஸ்ரீராமஜெயம், ஸ்ரீராமஜெயம்னு மட்டும்தான் அவ எழுதி இருந்தா"

"ஹா ஹா! அப்புறம் என்ன செஞ்சீங்க"

"என்ன செய்றது? ஏதோ பத்து,பதினஞ்சு மார்க்காச்சும் அவ எடுக்கட்டும்னு என் கைல இருந்த பிட்டை அவளுக்கு பாஸ் செஞ்சேன்."

"அவங்க வேணாமுன்னு சொல்லலியா"

"அவளா? அவ ஏதோ பிட் அடிக்கறதுல எக்ஸ்பெர்ட் மாதிரி அதை வாங்கி அவ்வளவு நேக்கா பிட் அடிச்சா. அவ மூஞ்சியை பாத்தா அவ பிட் அடிக்கிறான்னு எவனும் சொல்ல மாட்டான்."

"சரி! இதுல எங்க காதல்"

"இரு! அவ என் கிட்ட பிட் வாங்குனதும்தான் எனக்கு அப்போதான் எனக்கு இவ கிட்ட லவ் சொல்ல இதுதான் சரியான நேரமுன்னு. ஒரு பேப்பரை எடுத்தேன். பென்சிலால ஒரு இதயத்தை வரைஞ்சு அதுல அம்பு விட்டேன். எழுதுன பேப்பரை அவ கிட்ட பாஸ் பண்ணேன்."

"பரீட்சை ஹால்லயா? ஏன் அவ்வளவு அவசரம்."

"இப்போ லெட்டர் குடுத்தாதான் அவளால கத்தி ஊரை கூட்ட முடியாது. குடுத்த பேப்பரை வெளியே எடுத்துட்டு போய் அவங்க அப்பா கிட்ட போட்டு தரவும் முடியாது. திரும்ப என் கிட்டதான் குடுத்து ஆகணும். அதை நான் அழிச்சுட்டு ஏதாவது எழுதிட்டு கட்டி கொடுத்துடுவேன். ரிஸ்க் இல்லாம லவ்வை சொல்லிடலாம்."

"அபார மூளைண்ணே உங்களுக்கு. இந்த மூளையை படிப்புல காட்டி இருந்தா நீங்க பெரிய ராக்கெட் எஞ்சினியர் ஆகி இருப்பீங்க. சரி அதை படிச்சுட்டு என்ன சொன்னாங்க"

"நான் பேப்பரை குடுத்துட்டு அவ படிக்கிறாளான்னு பாத்துகிட்டே இருந்தேன். அவ அதை பாத்த உடனே இன்னொரு பேப்பரை எடுத்து பென்சிலால ஏதோ எழுதுனா. என் கிட்ட அந்த பேப்பரை பாஸ் செஞ்சா"

"என்ன எழுதி இருந்துச்சு அந்த பேப்பர்ல? லவ் ஓகே ஆயிடுச்சா"

"நானும் ஓகே சொல்லிதான் எழுதுறான்னு நெனச்சேன். ஆனா இங்கதாண்டா ட்விஸ்ட். அவ அந்த பேப்பர்ல எனக்கு படம் வரைய சரியா வராது. நீங்க குடுத்த படத்தையே நான் கட்டி குடுத்துடறேன். நீங்க உங்களுக்கு வேற படம் வரைஞ்சுகுங்க அப்பிடின்னு எழுதி இருந்தா. அவளுக்கு எப்பிடி புரிய வச்சு அந்த பேப்பரை வாங்குறதுன்னு தெரியல. கடைசில கட்டியே குடுத்துட்டா"

"அடி பாவி! அவளுக்கு பிசிக்ஸ்க்கும், பயாலஜிகுமா வித்தியாசம் தெரியாது?"

"அந்த கூமுட்டைக்கு அதுவே தெரியலையே".

"அப்புறம் என்ன ஆச்சு? பேப்பர் திருத்தும்போது நீங்க ரெண்டு பேருமே கையும் களவுமா மாட்டிகிட்டீங்களா?"

"அது நடந்து இருந்தா கூட பரவாயில்லயே"

"அப்புறம் என்ன ஆச்சு?"

"பரீட்சை ரிசல்ட் வரும்போது நான் ஃபெயில். அவ பாஸ் ஆகி இருந்தா. இப்போ அவ அந்த பிசிக்ஸ் வாத்தியாரை கல்யாணம் செஞ்சுகிட்டு ரெண்டு பிள்ளைங்களோட சந்தோசமா வாழ்ந்துகிட்டு இருக்கா"

"அட பாவமே! பாவம்னே நீங்க. நீங்க குடுத்த லவ் லெட்டரால அந்த பொண்ணு ப்ரீத்தி பிசிக்ஸ் வாத்தியார் கூட சேந்து லைப்ல செட்டில் ஆகிடிச்சு. ரொம்ப சோகமான கதைதான்."

"ஆமாடா! இந்த மாதிரி ஒரு சோகம் யாரு வாழ்க்கையிலயும் வந்திடவே கூடாது."
-- முகநூலிருந்து 
-- முதன்மை பதிவு (http://vathikuchi.blogspot.in/2013/08/u.html)

Friday, May 24, 2013

கிராமத்து `மாயன்’கள் !


`மாயன்’.. 2012 ல் உலகம் அழியப்போகுதுனு பீதியை கிளப்புனப் பயலுக. அதுக்கப்புறம் தான் 2012 டிசம்பர் வரைக்...கும் எல்லோரும் மாயன் பீதி பிடிச்சுச்சு.

ஆனா திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்ட மக்களுக்கு மாயன்களோடு பல தலைமுறைகளா உறவு உண்டு. இந்த மாயன் நீங்க நினைக்கிற பீதி கிளப்புன மாயன் அல்ல.. இவர் மாயாண்டி சுடலை. தென் மாவட்ட மக்களின் மூதாதையர்களில் பெரும் வீரனாக இருந்திருக்க கூடும். இப்படி ஒவ்வொரு பகுதிக்கும் பல எல்லைக் காத்த வீரர்கள் இருந்திருக்கிறார்கள்.

திருநெல்வேலியில் பெரும்பாலான பகுதி மக்களுக்கு அந்த மாயண்டி சுடலை தான் தலைவன். வீட்டில் குழந்தைகளுக்கு `சுடலை’ என்ற பெயர் தவறாது இருக்கும். பள்ளிகளில் ஒரே வகுப்பில் சுடலை, சுடலை முத்து.. என ஏகப்பட்ட சுடலைகள் இருப்பார்கள். இன்சியல் மூலமே அவர்கள் பிரித்து அறியப்படுவார்கள். இப்போது அந்த மாதிரி பெயர்கள் வைப்பது குறைந்திருக்கும் என நினைக்கிறேன். தற்போது குழந்தைகளுக்கு வடமொழி `ஷ்’களில் முடியும் வடமொழிப் பெயர்களை வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

சுடலை, முனியாண்டி, முத்தாரம்மன், பேச்சியம்மன், மாசனம், இசக்கியம்மன், உய்க்காட்டுச் சுடலை என்று கிராம மக்களின் கடவுள்களின் பெயர்களே சுவாரஸ்யமானது. அதுவும் அந்த கடவுள்களுக்கு (அல்லது பாட்டன், பூட்டி) கிராமங்கள் தோறும் சொல்லப்படும் விதவிதமான கதைகளையெல்லாம் தொகுத்தால் சுவாரஸ்யங்கள் அடங்கிய களஞ்சியமாகலாம். சிறுவயதில் இந்த மாதிரியான கதைகளை கேட்டுக் கேட்டு வளர்ந்தவன். ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கதை சொல்லி தாத்தாவோ பாட்டியோ இருப்பார்கள். அவங்க கதையை சொல்ல ஆரம்பிச்சாப்போதும்.. சுடலையே நம்ம பக்கத்துல வந்து நிக்குறமாதிரி இருக்கும்.

``முனியாண்டி பனமரம் ஒசரத்துல இருப்பான்.. கால்ல சலங்கையைக் கட்டிக்கிட்டு ஜல் ஜல்லுனு.. நடந்து வருவான் ’.. `வில்வண்டிப் பூட்டிக்கிட்டு வெள்ளைக்குதிரையில சுடலை பறந்து வர்றான் பாரு..’’ என்று தாத்தாக்கள் சொல்லும் கதைகள் அவர்களிடத்திலிருந்து மட்டும் வந்ததல்ல.. பல தலைமுறைகள் கடந்து வரும் வரலாறு.
இடையில் கதை சொல்லிகளின் எக்ஸ்ட்ரா டிங்கிரி பிங்கிரி கிராஃபிக்ஸ்கள் சேர்க்கப்பட்டு சுவராஸ்யமான கதைகளாக்கப்பட்டிருக்கும். இன்னைக்கு பத்திரிகைகளில் எழுதும் பல அப்பாடக்கர் எழுத்தாளர்கள் எல்லாம் இந்த கதை சொல்லிகளிடம் பாடம் படிக்க வேண்டும்.. அவ்வளவு பிரமாதமாக கதை சொல்வார்கள்.

பனையையும் அந்த மக்களையும் பிரிக்க முடியாது எனபதால் அவர்களின் சாமிகளுக்கு கோவிலாக இருப்பதும் பனை தான். இந்த தெய்வங்களுக்கு பீடம் எல்லாம் பனையின் அடிவாரம் தான். பனையை வைத்து தான் சாமிகளையும் அடையாளப்படுத்துவார்கள். பெருவாரியாக ஒத்தப்பனைகள் தான் இந்த சாமிகளின் இருப்பிடம்.

இந்த மக்கள் தெய்வங்களை எல்லாம் சிறு தெய்வங்கள் என்று அழைப்பதே தந்திரமான அரசியல். அந்த மக்களைப் பொருத்தளவில் சுடலைகளும், முத்தாரம்மன்களும், இசக்கியம்மன்களும், முனியாண்டிகளும் பெரும் தெய்வங்கள் தான். அவர்களின் மூதாதையர்களை சிறு தெய்வம் என்று சொல்ல நீங்கள் யார்..

அவர்கள் தங்கள் கடவுளான மூதாதையர்களிடம் வாக்குவாதம் செய்வார்கள்.. ஏன் இந்த வருசம் மழை வரலனு சண்டை போடுவார்கள்.. போ.. இனி உன்ன பார்க்க வரமாட்டேன் என்று கோபிப்பார்கள்.. ஊரை செழிப்பாக்குனாத்தான் உனக்கு கொடை.. இல்லனா கிடையாது என்று மிரட்டுவார்கள்.. இன்னும் வயித்துல புழு பூச்சி இல்ல.. பிள்ளப்பொறந்தா உன் பேரை வைக்குறேன்.. கொடை கொடுக்கேன் என்று பம்முவார்கள்.. ஊர் செழிப்பானால் தான் இந்த எல்லைச் சாமிகளும் செழிப்பாவார்கள்.

அப்படி நெல்லையில் பிரபலமான ஒரு எல்லைச்சாமி `சிறுமளஞ்சி ஒத்தப்பனை’ சுடலை ஆண்டவர்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரிக்கும் வள்ளியூருக்கும் இடையில் இருக்கிறது சிறுமளஞ்சி என்ற ஊர். இந்த ஊர் பிரபலமடைஞ்சதுக்கு காரணமே ஒத்தப்பனை சுடலை தான். இந்த சுடலையின் மூல ஸ்தலம் விஜயநாராயணத்திலிருக்கிறது. அங்கிருந்து மண் எடுத்து வந்து சிறுமளஞ்சியில் வைத்து வழிபட ஆரம்பித்திருக்கிறார்கள். 80 ஆண்டுகளுக்கும் மேலாக கொடைவிழா நடத்தப்பட்டு வரும் அந்த கோவிலின் முதல் சாமியாடி மாயாண்டி. அதன்பிறகு அவரது மகன் முத்துராஜ் ஆடினார். இந்த சுடலையின் சிறப்புகள் மற்றும் மிரட்டல்கள் கதைகள் ஏராளம் உண்டு.

இந்த கோவிலை நிர்வகிப்பவர்கள் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் எந்த சாதி பேதமில்லாமல் அனைவரும் கலந்து கொள்வதை காணமுடியும். இந்த கோவிலின் கொடைவிழா என்றால் அந்த பகுதி முழுக்க கொண்டாட்டம் தான். பல மைல்கள் தாண்டி எங்கெங்கோ இருந்தெல்லாம் ஆட்கள் வருவார்கள். சிறப்பு பேருந்துகள் விடப்படும்.

பெரிய மனுஷியான பெண் பிள்ளைகள் புது தாவணியுடன் வெட்கம் தின்ன ஒரு பக்கம், அரும்புமீசை வாலிபர்கள் ஒரு பக்கம், பெரியவர்கள் குழந்தைகள் பெண்கள் என ஊரே ஜெகஜோதியாக இருக்கும்.

வளையல் கடையில் ஆரம்பித்து திருவிழா சீனுக்கு தேவையான அத்தனை கடைகளையும் அங்கு பார்க்கலாம். ஒரு பக்கம் இன்னிசை கச்சேரி, இன்னொரு பக்கம் பட்டிமன்றம், கரகாட்டம், வில்லுப்பாட்டு, திரைப்படம் போடுதல் என்று எங்கு திரும்பினாலும் கொண்டாட்டமாக இருக்கும்.

கொடைவிழாவின் ஒரு பகுதியாக சாமியாடுபவர் இரவு 12 மணிக்கு சுடுகாட்டுக்கு வேட்டையாட சென்றுவிட்டு வருவார். அதன்பிறகு சாமக்கொடை ஆரம்பமாகும். நேர்ந்திருப்பவர்கள் தங்கள் ஆடுகளுடன் வரிசையாக நிற்பார்கள். பலி பீடத்தில் ஆடுகள் மார்பு பிளக்கப்பட்டு சாமியாடி ரத்தம் குடிப்பார். விடிய விடிய நடக்கும் இந்த பூஜை.

கடந்த முறை ஜெயலலிதா ஆட்சியில் ஆடு கோழி பலியிடக்கூடாது என்று சட்டம் போட்ட சமயத்தில் இந்த கோவிலுக்கு கொடை வந்தது. பலி கொடுக்க போலீஸ் எதிர்ப்பு தெரிவித்ததால் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் பிரச்னை ஆனது. சுடலையை பகைச்சவங்க ஆட்சியை இழப்பாங்க என்ற சாமியாடி முத்துராஜ் சாபம் கொடுத்ததும், ஜெயா ஆட்சியை இழந்ததும் கூட நடந்தது.

சிறுவயதில் இந்த கோவில் கொடைக்கு செல்லும்போதெல்லாம், சாமி சுடுகாட்டுக்கு தீப்பந்தத்துடன் வேட்டைக்குப் போவது, விடிய விடிய பலி கொடுக்கப்படும் ஆடுகளின் மார்பிலிருந்து பீய்ச்சி அடிக்கும் ரத்தத்தை வாய்வைத்து குடிப்பது போன்ற காட்சிகளை எல்லாம் பார்க்க அப்போது `திகிலாக’ இருக்கும். சாமி வேட்டைக்குப் போய்விட்டு வரும்போது வழியில் குறுக்கே போகக்கூடாது என்பார்கள். மீறி போனால் சங்கு தான் என்று திகிலுக்கு திகில் ஏற்றுவார்கள்.

இந்த திகிலை எல்லாம் தாண்டி அந்த திருவிழாவுக்கு வரும் ஜோவென்ற மக்கள் கூட்டம் , கரகாட்டம், இன்னிசைக் கச்சேரி என்று சுற்றி பார்த்து ஓய்ந்து கடைகளில் கிடைத்ததை சாப்பிட்டுவிட்டு புல்தரையில் தூங்கி எந்திரிப்பது காலையில் கிணத்துலயோ குளத்துலயோ ஆட்டம் போட்டுட்டு வீடு திரும்புவது எனக்கு பிடித்தமானது.

பின்னர் பெரியாரை பற்றி படிக்க ஆரம்பித்த ஆரம்ப காலங்களில் இந்த விசயங்களையெல்லாம் கிண்டலடிக்கவும் செய்திருக்கிறேன். வாசிப்பு அனுபவம் மாறவே நாம டார்கெட் வைக்க வேண்டியது இந்த மாயன்களை இல்லை என்பது புரிந்தது.

``எல மக்கா.. எப்படிருக்க.. ரெண்டு மாசத்துல சிறுமளஞ்சி கோவில் கொட வருதுடே.. இந்த தடவயாவது வந்துரு..’’ என்று இன்று காலை போன் செய்து கொடைவிழாவுக்கு அழைத்த நண்பனின் குரல்.. எங்க ஏரியா மாயனை நினைவுப்படுத்திவிட்டது. கோடைகாலம் வந்தால்போதும்.. ஒவ்வொரு ஊரிலும் கொடைக்கு ரெடியாகிவிடுவார்கள். பல இடங்களில் புலம்பெயர்ந்து நிற்கும் உறவுகள் ஒன்றாக சந்தித்து விருந்து சாப்பிடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட மேட்டர் தான் கொடை என நினைக்கிறேன்.

ஒவ்வொரு முறையும் நண்பன் கொடைவிழாவுக்கு கூப்பிடுவான். வேலை காரணமாக போக முடியாமலாகிவிடும்.. இப்போது கொடைவிழா எப்படி நடத்தப்படுகிறது என்று தெரியவில்லை. சும்மா அனுபவத்திற்காக இந்த முறையாவது போகலாம் என்று யோசித்திருக்கிறேன்.. :)


                                                                                    --- கார்ட்டூனிஸ்ட்.பாலா

Wednesday, March 13, 2013

காதல் பனியகம்

காபி ஷாப்பில்
'மது அருந்தக்கூடாது' வாசகம்.
நான் பருகிக்கொண்டிருந்தேன்
உன்னை!

*
இளநீரை குடித்தது
அவள்தான்
குளிர்ந்துபோனது என்னவோ
நான்.

*
ஹோட்டலில்
சாப்பாடு சொல்லிவிட்டு
ருசித்துக்கொண்டிருந்தோம் நாங்கள்
ஒருவரை ஒருவர்.

*

காபி சொல்லிவிட்டு
உரையாடிக்கொண்டிருந்தோம்
சில்லிட்டிருந்தது மனசும்.

*

ஐம்புலன்களுக்கும்
இன்பம் அளித்தது
அவள் கொடுத்த
ஒரு சின்ன முத்தம்.

*

பேறுகாலத்துக்காக
பிறந்த வீடு சென்றுவிட்டாய்
தாயை அணைத்துக்கொண்டு
தூங்கும் குழந்தையின்
ஏக்கமாய் என் இரவு.

*

உன் முனகல்களையும்
சிணுங்கல்களையும்
ரகசியமாய் சொல்லிச் சிரிக்கின்றன
நம் தலையணைகள்
நீ இல்லத இரவுகளில்.

*

பணியிலும் மனதிலும்
அழுத்தும் இறுக்கத்தை
அப்புறப்படுத்துகிறது
உன் ஆலிங்கனம்.

*

நாம் ஒத்தவர்கள்தானே
பின்பு ஏன்
விலக்குகின்றாய்
விலகி ஓடுகின்றாய்
ஓ... ஒத்த துருவங்கள்
விலக்கிக்கொள்ளும் அல்லவா!

---- சிவராஜ்

Wednesday, January 23, 2013

தபு ஷங்கர் காதல் கவிதைகள் - IV



கரையில் நின்றிருந்த உன்னைப் பார்த்ததும்
கத்தி விட்டன கடல் அலைகள்...
'கோடான கோடி ஆண்டுகள்
எம்பி எம்பிக் குதித்து
கடைசியில் பறித்தே விட்டோமோ
நிலவை!' என்று.


தொலைப்பேசியில்
நீ எனக்கு தானே 'குட்நைட்' சொன்னாய்.
ஆனால் இந்த இரவோ
அதைத்தான் நீ 'நல்ல இரவு' என்று
சொல்லிவிட்டதாக நினைத்து
விடியவே மாட்டேன் என்று அடம் பிடிக்கிறதே.


தான் வரைந்த ஓவியத்தை
கடைசியாக ஒரு முறை
சரி செய்யும் ஓவியனைப் போல்
நீ ஒவ்வொரு முறையும்
உன் உடையை சரி செய்கிறாய்.


காற்றோடு விளையாடிக் கொண்டிருந்த
உன் சேலைத் தலைப்பை இழுத்து
நீ இடுப்பில் செருகிக்கொண்டாய்.
அவ்வளவு தான்...
நின்றுவிட்டது காற்று.

 

Monday, January 21, 2013

திருநெல்வேலி வரலாறு!


 திருநெல்வேலி-_தென்தமிழகத்தின் பெருநகரம். வற்றாத தாமிரபரணி, இங்கேயே தோன்றி இங்கேயே மறைந்து விடுகிறது. அதனால், எந்த பிரச்னைக்கும் ஆளானதில்லை இந்த நதி. சுருக்கமாக,"நெல்லை' என்று இவ்வூரை அழைப்பர். நெல்லுக்கும், இந்த ஊருக்கும் சம்பந்தம் உள்ளதால், "திருநெல்வேலி' என்ற பெயர் அமைந்தது.

முழுதும் கண்ட ராமன் என்ற மன்னன், திருநெல்வேலியை ஆட்சி செய்து வந்தான். அவனது ஆட்சியில், 12 ஆண்டுகள் மழை இல்லை. வற்றாத தாமிரப...ரணி கூட, வறட்சியின் பிடியில் சிக்கியது. மக்களுக்கு எப்படி உணவிடுவது என்று மன்னன் கையைப் பிசைந்து கொண்டிருந்தான்.
வேதசன்மா என்பவர், தினமும் நெல்லை வந்து, நெல்லையப்பரை வணங்குவார். உணவுக்கு என்ன தான் பஞ்சமாக இருந்தாலும், தங்களை வாழவைக்கும் நெல்லையப்பரை மட்டும் பட்டினி போட்டு விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். அதன் காரணமாக, தினமும் அரிசி எடுத்து வந்து, இறைவனுக்கு நைவேத்யம் படைத்து வந்தார். பக்தர்களை சோதிப்பதில் சிவனுக்கு நிகரானவர் யாருமில்லை! அவர் வேதசன்மாவுக்கு சோதனை வைத்தார்.

அவரது சொத்துகளை படிப்படியாகக் கரையச் செய்தார். மிஞ்சியது ஒரு மூடை நெல் மட்டுமே! அது தீர்வதற்குள், மழை பெய்து வயல்கள் விளைந்தாக வேண்டும். "பெருமானே... நான் பட்டினி கிடந்தேனும், உனக்கு தினமும் அமுது படைப்பேன். இந்த நெல் தீர்வதற்குள் மழை பொழிந்து, உன் பங்கையாவது பெற்றுக் கொள்...' என்று வேண்டினார்.

சிவன் அவரது கோரிக்கையை ஏற்றார். ஆனால், அதி<லும் ஒரு சோதனை. ஒருநாள், வேதசன்மா நைவேத்யத்திற்குரிய நெல்லை, திறந்த வெளியில் காயப்போட்டு விட்டு, தாமிரபரணிக்கு நீராடச் சென்றார். அப்போது பெருமழை பிடித்துக் கொண்டது. வேதசன்மா மகிழ்ந்த அதே வேளையில், "ஐயையோ... நெல்லை வெட்ட வெளியில் காயப்போட்டு வந்தோமே... அது நனைந்து விட்டால், இன்றைய நைவேத்யத்திற்கு நெல்லுக்கு எங்கே போவது?' என வேகமாய் வீடு திரும்பினார்.

என்ன அதிசயம்... நெல்லைச் சுற்றி மழை பெய்ததே தவிர, நெல் மீது சொட்டு தண்ணீர் விழவில்லை. மழை நீர் வேலி போல் சுற்றி நின்று, உள்ளிருந்த நெல்லைப் பாதுகாத்துக் கொண்டிருந்தது. வேதசன்மா பரவசமடைந்தார். "நெல்லுக்கு வேலியிட்ட நாதா' என்று விழுந்து வணங்கினார்.

சிவன் நிகழ்த்திய இந்த திருவிளையாடல் காரணமாகவே, அதுவரை, "வேணுவனம்' என்று அழைக்கப்பட்ட அப்பகுதி, "நெல்வேலி' ஆனது. பின், மரியாதை கருதி, "திரு' என்ற அடைமொழி சேர்ந்து, "திருநெல்வேலி' என மாறியது. சிவன், "நெல்லையப்பர்' எனும் சிறப்புப்பெயர் பெற்றார். அந்த பெயரே நிலைத்து விட்டது. தைப்பூசத் திருவிழாவின் நான்காம் நாள், "நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்' நிகழ்ச்சி, நெல்லையப்பர் கோவிலில் நடத்தப்படும்.

தாமிரபரணியில் தண்ணீர் வற்றாமல் இருப்பதற்கு, நெல்லையப்பர் கோவிலின் அமைப்பே காரணம் என்கின்றனர். எல்லாக் கோவில்களிலும் சுவாமி அபிஷேக தீர்த்தம், வட பகுதியில் விழும்படியாகத்தான் கோமுகி இருக்கும். ஆனால், இங்கு வருணனின் திசையான மேற்கு நோக்கி இருக்கிறது. இந்த புனித நீர், தன் திசையில் விழுவதால் மகிழும் வருண பகவான், எப்போதும் இப்பகுதியில் மழை பொழிவித்து, தண்ணீர் பஞ்சம் இல்லாமல் வைத்திருக்கிறார் என்பது ஐதீகம்.

இக்கோவிலில், மூன்று மூலவர்கள் உள்ளனர். "வேண்ட வளர்ந்தநாதர்' சுயம்புமூர்த்தியாக இருக்கிறார். இவரே, "நெல்லையப்பர்' எனப்படுகிறார். இது தவிர, மகாவிஷ்ணு பூஜித்த லிங்கம் ஒன்றும், மூலவர் சன்னிதி முன்புள்ள பாதாளத்தில் திருமூல மகாலிங்கம் சன்னிதியும் இருக்கிறது. இவரே, இக்கோவிலின் முதல் லிங்கம் என்பதால், இவருக்கு முதல் பூஜை நடக்கிறது. மூவருமே மூலவராக வணங்கப்படுகின்றனர். பரணியில் நீராடி, பாவங்களைத் தொலைத்து புண்ணியத்தைப் பெற்றுச் செல்ல, நெல்லை நோக்கி பயணியுங்கள்.
 
 
--- நன்றி தினமலர் 

You may also like