Tuesday, February 22, 2011

ரத்த சரித்திரம்

டேனி படிக்கும் வகுப்பில் உயிரியலில் ரத்த ஓட்டத்தைப் பற்றி வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார் அறிவியல் ஆசிரியர்.

மிகத் தெளிவாக பாடம் நடத்தும் ஆசிரியர் என்பதால், எல்லோருக்கும் புரியும்படியான எளிமையான உதாரணத்தைக் கையில் எடுத்தார் அவர்.

"மாணவர்களே... நம் எல்லோருக்கும் நடக்கும் ஒரு உதாரணத்தைச் சொல்லுகிறேன். இப்போது நான் தலைகீழாய் நிற்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்.அப்போது, ரத்தமானது என் தலையை நோக்கி அதிவேகமாய்ப் பாய்கிறது. அதனால், எனது முகம் இன்னும் அதிகமாய் சிவக்கிறது... இல்லையா..?".

மாணவர்கள் எல்லோரும் கோரசாய், "ஆமாம் சார்..!" என்றார்கள்.

ஆசிரியர் அடுத்துக் கேட்டார்.

"அப்படியானால்... நான் நேராய் நிற்கும்போது, அதே ரத்தமானது, ஏன் என் கால்களில் அவ்வாறு பாய்வதில்லை..? ஏன், என் கால்கள் சிவப்பதில்லை..?".

எல்லா மாணவர்களும் சற்றே யோசனையில் அமைதியாய் இருக்கும்போது, டேனியின் பளிச்சென்று கேட்டது.

"ஏனென்றால், உங்களுடைய கால் காலியாய் இல்லை..!".
--  மின்மினி தேசம்


Friday, February 11, 2011

ஜெருசலேமில் தில்லுதுர

தில்லுதுர தன் மனைவி குழந்தைகள் மற்றும் மாமியாருடன் ஜெருசலேம் டூர் போயிருந்தார்.

நண்பர் ஒருவர் ஏற்பாடு செய்திருந்த லோ பேக்கேஜ் டூர் அது.

கிளம்பியதில் இருந்து நல்ல விதமாகவே போய்க் கொண்டிருந்த அந்த 15 நாள் டூரின் நடுவில், சரியாக எட்டாவது நாளில் அந்தப் பிரச்சினை வந்தது.

எட்டாவது நாள் இரவில்தான் தில்லுதுரயின் மாமியாருக்கு நெஞ்சு வலி வந்தது.

நள்ளிரவு நேரம், பாஷை தெரியாத ஊர்.

என்ன செய்வது என்று முடிவு எடுத்து ஹாஸ்பிடல் கொண்டு சேர்ப்பதற்குள் மாமியாரின் கதை முடிந்தே விட்டது.

டாக்டர், 'மாமியாரின் கதை முடிந்தது...' என்று கையை விரித்ததும், மனைவியும் குழந்தைகளும் அழுது புலம்ப தில்லுதுர தனக்கு டூர் அரேஞ்ச் செய்த நண்பனை போனில் கூப்பிட்டு விஷயத்தைச் சொன்னான்.

நண்பன் அங்கே இங்கே என்று விசாரித்துவிட்டு தில்லுதுரயின் போனுக்கு வந்தான்.

"தில்லு.. மாமியார இங்கயே புதைச்சுட்டா நம்மூருப் பணத்துல இருபதாயிரம் தான் ஆகுமாம். அதே பாடிய நம்மூருக்கு கொண்டு போகணும்னா அஞ்சு லட்சத்தத் தாண்டுமாம். என்ன பண்ணனும்னு முடிவு பண்ணிச் சொல்லு..!".

அழுது கொண்டிருந்த மனைவி தில்லுதுரயின் முகத்தைப் பார்க்க, தில்லுதுர நண்பனிடம் போனில் சொன்னான்.

"இதோப்பாருடா... அஞ்சு லட்சமில்ல, அம்பது லட்சமானாலும் பரவாயில்ல. என் மாமியார எங்க ஊர்லதான் அடக்கம் பண்ணனும். ஏற்பாடு பண்ணு...!".

தில்லுதுர சொன்னபடி மாமியாரின் உடல் சென்னை வந்து அடக்கம் செய்யும் போது, செலவு கிட்டத்தட்ட ஏழு லட்சம் ஆகியிருந்தது.

வந்தவர்களில் தில்லுதுரயின் நெருங்கிய நண்பன் ஒருவன் கேட்டான்.

"ஏன்டா... அங்கயே எல்லாத்தையும் முடிச்சுட்டு வந்திருந்தா இந்த ஏழு லட்சம் மிச்சம்தானே..?".

நண்பன் கேட்டதும் சுற்றும் முற்றும் ஒருமுறை பார்த்துவிட்டு, தில்லுதுர தணிந்த குரலில் தன் நண்பனிடம் சொன்னான்.

"அங்கயே பொதச்சிருக்கலாம்தான். ஆனா, அந்த ஊர்லதான் யேசு கிறிஸ்து செத்துப் போன மூணாம் நாளே உயிரோட வந்தாராமே..! கைடு அன்னிக்கு காலைலதான் சொன்னான். சரி, மாமியார் விஷயத்துல எதுக்கு அந்த ரிஸ்க் எடுக்கணும்தான் செலவானாலும் பரவாயில்லேனு இங்கயே கொண்டு வந்துட்டேன்..!" என்றான்.
-- மின்மினி தேசம்


Friday, February 4, 2011

ஊடல்...

என்னுடன் நீ பேச மாட்டாயாமே..
அதை உன் விழிகளிடம் சொல்லவில்லையா?பிடித்ததை கண்சிமிட்டியும்
பிடிக்காததை புருவம் உயர்த்தியும்
எனக்குத் தெரிவிக்கிறதே...

சமாதானமாக நான் பேசும்போதெல்லாம்
செவிகளை எனக்கும்
விழிகளை சுவற்றுக்கும் கொடுக்கிறாய்..
 
அருகிருந்தும் கைபேசி தூதுப் பறவையாகிப் போகிறது..
என்னிடமிருந்து 'லவ் யூ'வும்
உன்னிடமிருந்து 'ஹேட் யூ'வும்
பரிமாறப்படுகிறது..
 
பேசும் நேரங்களை விட
பேசாத நேரங்களில்
காதல் வெகுவாகப் பிரதிபலிக்கிறது நமக்குள்..

'
சாப்பிடு' என்று நான் கெஞ்சவேண்டும்
என்பதற்காகவே ..
பசியோடு காத்திருக்கிறாய்..
கோபம் எனும் சாயம் பூசிக்கொண்டு.
 
பின்கூட்டி அணைக்கிறேன்..
பிடிக்காதது போல உதறுகிறாய்..
இறுக்காத பிடியிலும் கூட
இறுகியதாய் தடுமாறுகிறாய்..
ஏனோ தெரிவதில்லை..
உன்னை செல்லமாக சீண்டும் தருணங்களில்
நான் இருமடங்கு காதல் வயப்படுகிறேன்..
 
உனக்குப் பிடிக்காத சேனல் மாற்றி
உன்னை வெறுப்பெற்றுகிறேன்..
பதிலுக்கு பழிவாங்குவதாக அணைக்கிறாய்..
தொலைக்காட்சியை..
 
எனது சேஷ்டைகளைப்
போலியாக வெறுக்கும்
உன் நடிப்பு
ஆஸ்கரையும் மிஞ்சும்..
 
உன் குழந்தைத் தனமான கோபங்களில்
அவ்வப்போது கரைந்து தான் போய்விடுகிறேன்..
என்னென்னவோ கோமாளித்தனங்கள் செய்து
ஒருவழியாக உன் மௌனத்தை கலைத்துவிட்டேன்..
'
பழம்' என்று சிறுவர்கள் விரல் நீட்டி சொல்வது போல..
 
ஆனாலும் மீண்டும் காத்திருக்கிறேன்..
நமக்குள் சுவாரஸ்யமாய் அரங்கேறும்
ஊடல் எனும் நாடகத்திற்காக..
-- இந்திரா

You may also like