Showing posts with label Politics. Show all posts
Showing posts with label Politics. Show all posts

Tuesday, January 24, 2012

காமராஜர் - The King Maker



மூத்தவர்கள் அரசாங்கப் பதவிகளில் இருந்து விலகி, கட்சிப் பணியாற்ற வேண்டும் என்ற 'கே.பிளான்' போட்டுக் கொடுத்த இவரே முதல் ஆளாகப் பதவி விலகினார். 'எனக்கு எந்தப் பற்றும் இல்லைன்னு காட்டினாதான் மத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ண முடியும்' என்றார்!

ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பேசுவார். பத்திரிகையாளர் சாவி ஒருமுறை சந்திக்கச் சென்றபோது ஜான் கன்டர் எழுதிய இன்சைட் ஆப்பிரிக்கா என்ற ஆங்கிலப் புத்தகத்தைப் படித்துக்கொண்டு இருந்தாராம்!

அவரளவுக்குச் சுருக்கமாக யாராலும் பேச முடியாது. உ.பி-யில் ஒரு பிரஸ்மீட். 50 கேள்விகளுக்கு ஏழு நிமிடத்தில் பதில் சொன்னாராம். இரண்டரை மணி நேரத்தில் எட்டு ஊர்களில் கூட்டம் பேசியிருக்கிறார். இசை விழாவைத் தொடக்கிவைக்க அழைத்தார்கள். 'இசை விழாவைத் தொடக்கிவைப்பதில் பெருமைப்படுகிறேன்' என்று மட்டுமே சொல்லி விட்டு இறங்கினார்!

நாற்காலியில் உட்காருவது அவருக்குப் பிடிக்காது. சோபாவில் இரண்டு பக்கமும் தனது நீளமான கைகளை விரித்தபடி உட்காரவே விரும்புவார். முதல்வராக இருந்தபோதும் தலைமைச் செயலகத்தில் பிரத்யேகமாக சோபா வைத்திருந்தார்!

கடிகாரம் கட்ட மாட்டார். சின்ன டைம்பீஸைத் தனது பையில் வைத்திருப்பார். தேவைப்படும்போது எடுத்துப் பார்த்துக்கொள்வார்!

'ஆறாவது வரை படித்தவர்தானே! என்ற அலட்சியத்துடன் முதல்வர் காமராஜரின் அறைக்குள் அலட்சியமாக நுழைவார்கள் அதிகாரிகள். வெளியே வரும்போது அவர்களின் வால், கால்சட்டைக்குள் மடக்கிச் சொருகப்பட்டு இருந்தது!' என்று அவரது அறிவாற்றலை மெச்சினார் ஆர்.வெங்கட்ராமன்!

தான் முதலமைச்சரானபோது தன்னை எதிர்த்து முதல்வர் வேட்பாளராக நின்ற சி.சுப்பிரமணியத்தையும் அவரது பெயரை முன் மொழிந்த பக்தவத்சலத்தையும் அமைச்சரவையில் இணைத்துக்கொண்டார்!

தனது வலதுகரமாக இருந்த ஜி.ராஜகோபாலன் இறந்தபோது மட்டும்தான் காமராஜரின் கண்கள் லேசாகக் கலங்கினவாம். தாய் சிவகாமி இறந்தபோதுகூட அழவில்லை அவர்!

'தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளோடுஒட்டோ, உறவோ இல்லை. இந்தக் கட்சிகளோடு உறவு வைத் துள்ள கட்சிகளோடும் உறவு இல்லை' - காமராஜர் கூட்டிய கடைசி நிர்வாகக் கமிட்டியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இது. இதை அவரது மரண சாசனம் என்பார்கள்!

விருதுநகர் தொகுதியில் அவர் தோற்றபோது கட்சிக்காரர்கள் அழுதார்கள். 'இதுதான்யா ஜனநாயகம். ஜெயிச்சவனைக் குறை சொல்லாமல் தோத்துப் போனதைப் புரிஞ்சுக்கிட்டாதான் அடுத்த முறை ஜெயிக்க முடியும்!' என்று அலட்டிக்கொள்ளாமல் சொன்னவர்.

கோடை காலத்தில் இரண்டே இரண்டு நாட்கள் குற்றாலத்தில் போய் தங்கிவிட்டு வருவார். அவரது அதிகபட்ச சந்தோஷமாக அதுதான் இருந்திருக்கிறது!

ஒன்பது ஆண்டுகள் முதல் அமைச்சர், பல ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த அவர், இறக்கும்போது மிச்சம் இருந்தது பத்து கதர் வேஷ்டிகள், சட்டைகள் மற்றும் நூறு ரூபாய்க்கும் குறைவான பணம்!

இன்ஃப்ளூயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்த காமராஜருக்கு 1975 அக்டோபர் 2-ம் தேதி அதிகமாக வியர்த்தது. டாக்டர் அண்ணாமலைக்கு அவரே போன் செய்துவிட்டு, 'டாக்டர் வந்தா எழுப்பு... விளக்கை அணைச்சிட்டுப் போ' என்றார். அதுவே அவர் கடைசியாகச் சொன்ன வார்த்தை. டாக்டர் வரும்போது காமராஜர் அணைந்துவிட்டார்

( காமராஜர் 25 - ப.திருமாவேலன் )

Wednesday, December 15, 2010

யாருக்கும் வெட்கமில்லை - ஞாநி

ரத்தம் கொதித்தது - நவம்பர் 18ஆம் தேதி மதுரையில் கருணாநிதியின் பேரன் கல்யாணத் திருவிழா நிகழ்ச்சிகளை டி.வி.யில் பார்த்தபோதும் செய்திகளைப் பத்திரிகைகளில் படித்தபோதும்.

பள்ளிகளுக்கு விடுமுறை. பல்கலைக்கழகத் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன. மதுரையின் இளவரசர் என்று அழகிரி மகனைப் போற்றி விளம்பரப் பலகைகள். தாம் மேற்கொண்ட அதே பகுத்தறிவு லட்சியத்தைத் தம் குடும்பமே பேரன், பேத்திகள் வரை பின்பற்றுவதைப் பற்றிப் பெருமைப்படுவதாக மேடையில் கருணாநிதியின் ஓர் அப்பட்டமான பொய்ப் பேச்சு... எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தமாதிரி திருமணத்துக்கு வந்த ஆங்கில வாழ்த்துச் செய்திகளைப் படித்து நன்றி கூறியது தயாநிதிமாறன். பக்கத்தில் அழகிரி.

இவர்களின் சண்டையினால் தானே மதுரை தினகரன் அலு வலகத்தில் மூன்று அப்பாவி மனிதர்கள் செத்தார்கள். தீ வைத்தவர்கள் எல்லாம் கல்யாணப் பந்தலில் விருந்தினர்களாக...

கருணாநிதி குடும்பத்தில் தயாளு அம்மாளிலிருந்து தயாநிதி வரை எல்லோரும் எப்பேர்ப்பட்ட திறமையான நடிகர்கள் என்பது அன்றைக்கு மேடையில் தெரிந்தது. அடுத்த சில நாட்களில் வெளிவந்த அவுட்லுக் இதழில் அம்பலப் படுத்தப்பட்ட நீரா ராடியா ஃபோன் பேச்சு டேப்களைப் படித்தபோதுதான், அவர்களின் நடிப்புத் திறமையின் முழுப் பரிமாணமும் புரிந்தது. சிவாஜி கணேசன் முதல் தனுஷ் வரை பத்மினி, சாவித்திரி முதல் த்ரிஷா வரை அத்தனை நடிகர்களையும் தூக்கிச் சாப்பிட்டு விடுகிற திறமையுடன் ஒரே குடும்பத்தில் இத்தனை பேர் இருக்கிறார்களே என்று வியப்பாகவும் எரிச்சலாகவும் இருந்தது.

மக்களுக்குத் தொண்டு செய்வதற்காக தயாநிதி மாறனும் கனிமொழியும் ஆ.ராசாவும் எவ்வளவு துடித்திருக்கிறார்கள் என்பதை நீரா ராடியா டேப்கள் நமக்குப் புரியவைக்கின்றன. இந்த டேப்கள் எதுவும் எந்தப் பத்திரிகையாளரும் தனி முயற்சியில் பதிவு செய்தவை அல்ல. அரசாங்கத்தின் வருமானவரித் துறை, உள்துறை அனுமதியுடன் நீரா ராடியாவைத் தொடர்ந்து கண்காணித்துப் பதிவு செய்தவை. இப்போது உச்ச நீதி மன்றத்தின் முன்னால் தாக்கல் செய்யப்பட்டிருப்பவை. இவற்றிலிருந்து தெரியவரும் தகவல்கள் தான் என்ன?

1. ‘கருணாநிதிக்கு வயதாகி புத்தி பேதலித்துவிட்டது. ( senile ). இனிமேல் தானும் ஸ்டாலினும் தான் கட்சியை நடத் திச் செல்லப் போகிறோம். காங்கிர ஸார் என்னுடன் பேசுவதுதான் நல்லது. ஸ்டாலினும் என் கட்டுப் பாட்டில் தான் இருப்பார்’ என் றெல்லாம் தயாநிதிமாறன் தில்லியில் சொல்வதாக நீரா ராடியா, ஆ.ராசாவிடம் சொல்கிறார்.

2. அழகிரிக்கு ஆங்கிலம் தெரியாது என காங்கிரஸார் மனத்தில் விதைத்தது யாரென்று தமக்குத் தெரியும் என ராசா சொன்னதுக்குதான் மேற்படி பதில்.

3. அதுமட்டுமல்ல அழகிரி ஒரு கிரிமினல். ஐந்தாவது வகுப்புக்கு மேல் படிக்கவில்லை என்றும் தயாநிதி சொல்லியிருக்கிறார். இதையெல்லாம் கருணாநிதியிடம் சொல்லுங்கள் என்கிறார் நீரா.

4. இல்லை. நான் அழகிரியிடமே சொல்லிவிட் டேன். அவர் தலைவரிடம் போய்ச் சொல்லிவிட்டார் என்கிறார் ராசா.

5. எங்களுக்கு டி.ஆர்.பாலுவுடன்தான் பிரச்னை. ராசாவிடம் இல்லை என்று சோனியா காந்தியை நேரடியாகவே கருணாநிதியிடம் ஃபோனில் சொல்ல வைக்கும்படி ராசா, நீராவைக் கேட்டுக் கொள்கிறார். அகமது படேல் மூலம் சொல்லுவதாக நீரா சொல்கிறார். பாலுதான் பிரச்னை என்பதை எழுதி ஒரு சீலிட்ட கவரில் வைத்து கருணாநிதியிடம் கொடுக்கச் சொல்கிறார் ராசா.

6. தம்மைத்தான் தி.மு.க சார்பில் தில்லியில் காங்கிரஸாருடன் பேசும்படி கருணாநிதி தனியே சொல்லியனுப்பி இருப்பதாக தயாநிதி மாறன் தில்லியில் சொல்லிவருவதாக நீரா, கனிமொழியிடம் சொல்கிறார்.

7. தயாநிதி பொய் சொல்வதாகவும் பொய்களைப் பரப்புவதாகவும் கனிமொழி, நீராவிடம் சொல்கிறார். அதற்கு நீரா, சென்னையில் சன் டி.வி.காரர்கள் இதர வட இந்திய சேனல்கள் எல்லோரிடமும் தவறான செய்திகளை வேண்டுமென்றே பரப்புகிறார்கள் என்று தம்மிடம் சி.என்.என்.ஐ.பி.என். சேனலின் ராஜ்தீப் சர்தேசாய் கூறியதாகத் தெரிவிக்கிறார்.

8. தயாநிதி, பதவி ஏற்பு நிகழ்ச்சிக்குச் செல்லப் போவதாக நீரா, கனிமொழியிடம் சொல்கிறார். போகக்கூடாது என்று கருணாநிதி சொல்லியிருப்பதாகக் கனிமொழி சொல்கிறார். ராசாதான் போகவேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறதாம். ஆனால் தயாநிதி பின்னால் கருணாநிதியிடம் வந்து அகமது படேல் கூப்பிட்டதால் சென்றேன் என்று ஏதாவது கதை விடுவார் என்கிறார் கனிமொழி. இதையெல்லாம் அப்பாவிடம் சொல்ல வேண்டி யதுதானே என்று நீரா கேட்கிறார். அய்யோ அவருக்குப் புரியவே புரியாது, என்று அலுத்துக் கொள்கிறார் கனிமொழி. விரக்தியடையாதே. நீதான் மகள். நீதான் அப்பாவிடம் பேசவேண்டும் என்று ஆறுதல் சொல்கிறார் நீரா.

9.தமக்கு கேபினட்டில் என்ன துறை தருவார்கள் என்று நீராவிடம் கனிமொழி கேட்கிறார். நல்வாழ்வு, சுற்றுச் சூழல், விமானத்துறைகளில் ஒன்றைத் தரச் சொல்லியிருப்பதாக நீரா சொல்கிறார். சுற்றுலா வேண்டாம் என்கிறார் கனிமொழி.

10. தொழிலதிபர் ரத்தன் டாட்டாவுடன் நீரா பேசும்போது, அமைச்சர் ராசாவை தயாநிதி துரத்தித் துரத்தி அடிப்பது கவலையாக இருப்பதாக டாட்டா சொல்கிறார். எதுவும் ஆகாது. அப்படியே ஆனாலும், ராசா இடத்துக்குக் கனிமொழிதான் வருவார் என்று ஆறுதல் சொல்கிறார் நீரா.

11. இன்னொரு பேச்சில், ராசாவுக்காக இவ்வளவு செய்திருந்தும் இப்படி ( நமக்குச் சாதகமில்லாமல்) நடந்துகொள்கிறாரே என்று கவலைப்படுகிறார் ரத்தன் டாட்டா. கோர்ட் உத்தரவினால் அப்படி என்று தம்மிடம் ராசா விளக்கியதாகவும் கோர்ட் உத்தரவைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். அதற்கு வியாக்யானம் சொல்வது ராசா கையில்தான் இருக்கிறது என்று ராசாவிடம் சொல்லிவிட்ட தாகவும் நீரா தெரிவிக்கிறார்.

12. புதிய அட்டர்னி ஜெனரல் பற்றி ரத்தன் டாட்டா கவலை தெரிவிக்கிறார். அவரைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். நமக்கு சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம்தான் முக்கியம். அவரைப் பார்க்கப்போகிறேன். அவருக்கு அனில் அம்பானியைத் துளியும் பிடிக்காது. நேர்மையானவர். (!) அனில் சொல்வதை ஒப்புக் கொள்ளமாட்டார் என்று நீரா பதிலளிக்கிறார்.

13. அனில் அம்பானியின் குழப்படிகள் பற்றி ஏன் மீடியா அம்பலப்படுத்தாமல் இருக்கிறது என்று டாட்டா, நீராவைக் கேட்கிறார். விளம்பர பலம்தான். ஏதாவது நெகட்டிவாக எழுதினால் உடனே விளம் பரத்தை நிறுத்திவிடுகிறார்கள் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவும் தைனிக் பாஸ்கர் பத்திரிகையும் சொல்கிறார்கள். மற்றவர்களும் இதைச் செய்யமுடியுமே என்றேன். மீடியா ரொம்ப ரொம்ப பேரா சைப்படுகிறது என்று விளக்குகிறார் நீரா.

14. என்.டி. டி.வி.யின் பர்க்கா தத்துடன் நீரா பேசுகிறார். இருவரும் காங்கிரஸ் - தி.மு.க அமைச்சர் பதவிப் பங்கீடு பேச்சு வார்த்தைகளை விவாதிக்கிறார்கள். தாம் காங்கிரஸ் தரப்பிடம் என்ன தெரிவிக்க வேண்டும் என்று பர்க்கா கேட்கிறார். தாம் அம்மா, மகள் (ராஜாத்தி, கனிமொழி) இரு வருடனும் பேசிவிட்டதாகவும் , காங்கிரஸ் தலைவர்கள் கருணாநிதியிடம் நேரடியாகப் பேசவேண்டும் என்றும் தயாநிதி மாறன், பாலு இருவரையும் வைத்துக் கொண்டு பேசக் கூடாது என்றும் நீரா சொல்கிறார்.

15. ஹிந்துஸ்தான் டைம்ஸின் ஆசிரியர் இயக்குனர் வீர் சிங்வியும் நீராவும் பேசுகிறார்கள். சிங்வி, தாம் தொடர்ந்து சோனி யாவையும் ராகுலையும் சந்தித்து வருவதாகச் சொல்கிறார். அமைச்சர் இலாக்கா பங்கீட்டுப் பிரச்னை காங்கிரஸ்-தி.மு.க பிரச்னை அல்ல. தி.மு.கவின் உள்தகராறுதான் என்கிறார். இரண்டு மனைவிகள், ஒரு சகோதரன், ஒரு சகோதரி, ஒரு மருமகன், என்று எல்லாம் ஒரே சிக்கலாக இருக்கிறது. கருணாநிதி தானே நேரில் பேசட்டும். அல்லது இன்னார்தான் தம் சார்பில் என்று ஒரே ஒருவரைத் தெரிவிக்கட்டும். ஆளுக்கு ஆள் பேசுகிறார்கள். தயாநிதி, குலாம் நபி ஆசாதை அடிக்கடி கூப்பிட்டு நான் தான் அதிகாரபூர்வமான பிரதிநிதி என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார். யாரும் அவரை சீரியசாக எடுத்துக் கொள்வதில்லை என்று வீர் சிங்வி சொல்கிறார்.

16. நீரா உடனே தயாநிதி மாறனை அமைச்சரவையில் சேர்க்கப் பெரும் நிர்ப்பந்தம் இருப்பதாகச் சொல்கிறார். என்ன நிர்ப்பந்தம்? தயாநிதி, கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு 600 கோடி ரூபாய் கொடுத்திருப்பதாகவும் அதனால் ஸ்டாலினும், செல்வியும் நிர்ப் பந்திப்பதாகவும் நீரா சொல்கிறார்.

இப்படியாகத் தமிழ் நாட்டின் மானத்தை தில்லியில் தி.மு.க தலைவர் கருணாநிதியின் குடும்பம் நாறடித்துக் கொண்டிருக்கும் கதை தொடர்கிறது.

படிக்கப் படிக்க ரத்தம் கொதிக்கிறது...

மேலே கொடுக்கப்பட்டது சுருக்கம்தான். முழு உரையாடல்களைக் கேட்டால், மந்திரி பதவிக்கான வெறி, ஆவேசம், பேராசை, நினைத்தபடி ஒவ்வொன்றும் நடக்கவில் லையே என்ற ஆதங்கம், எரிச்சல், எப்படி யாவது காரியத்தை முடித்துவிடவேண்டு மென்ற பதைப்பு எல்லாம் கனிமொழியின் பேச்சில் தொனிக்கின்றன. ஒவ்வொருவர் பேச்சிலும் ஒரு தொனி இருக்கிறது. தைரியம், மமதை, எல்லாம் தம் கண்ட்ரோலில் இருக்கிறது என்ற மிதப்பு எல்லாம் தெரிகின்றன.

இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை களையே உலுக்கும் கேள்விகளையும் அவற்றுக்கு அதிர்ச்சியான பதில்களையும் இந்த டேப்கள் நமக்குள் எழுப்புகின்றன.

கேள்வி 1: அமைச்சர்களைத் தேர்ந் தெடுப்பது யார்? பிரதமரா? தொழிலதி பர்களா?

பதில்: தொழிலதிபர்கள்தான். மன் மோகன்சிங் ஒரு டம்மி பீஸ்.

கேள்வி 2: எதற்காகக் குறிப்பிட்ட துறை தமக்கு வேண்டுமென்று அலைகிறார்கள்? தொண்டு செய்யவா? கொள்ளையடிக்கவா?

பதில்: கேள்வி கேட்ட முட்டாளே! தொண்டுக்கும் அரசியலுக்கும் என்ன சம் பந்தம் ? கொள்ளையடிக்கத்தான்.

கேள்வி 3: எல்லா ஊழல்களையும் முறை கேடுகளையும் அம்பலப்படுத்தும் மீடியா காரர்கள் அரசியல்வாதிகளுடன் செய்தி சேகரிக்கப் பேசினால் குற்றமா ? அது தரகு வேலை பார்ப்பதாகிவிடுமா?

பதில்: செய்தி சேகரிப்பவரின் தொனி வேறு. தரகு பேர்வழியின் தொனி வேறு. நிச்சயம் ராடியா டேப்களில் இருக்கும் தொனி தரகர்களின் தொனிதான்.

கேள்வி 4 : ராடியா டேப்கள் பற்றி கருணாநிதி, கனிமொழி, ராசா, தயாநிதி மாறன், மன்மோகன்சிங், சோனியா, ராகுல் காந்தி, ரத்தன் டாட்டா ஆகியோர் ஏன் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை ?

பதில்: சொன்னாலும் நாம் நம்பப் போவதில்லை என்பது அவர்களுக்குத் தெரியும் என்பதால்தான்.

கேள்வி 5: இத்தனைக்கும் பிறகு எப்படி மக்களைத் தேர்தலில் சந்திக்கத் தெருத் தெருவாக இனி வருவார்கள் ?

பதில்: ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய்களில் ஒரு துளியை, கவர்களில் கொடுத்தால் மக்களுக்குப் போதுமானது என்று அவர்கள் நம்புவதனால்தான்.

இந்தக் கட்டுரையை எப்படி முடிக்க? கண்கள் பனித்தன. நெஞ்சம் இனித்தது என்றா?

நன்றி: கல்கி  

Monday, December 13, 2010

தன்மானத் தமிழன் விவசாயி விஜயகுமார்

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக் கொடுத்து இலவசத் திட்டங்களுக்கு சாட்டையடி கொடுத்திருக்கிறார்.

கடந்த 23-ம் தேதி கொத்தமங்கலம் கிராமத்தில் புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க.செயலாளர் பெரியண்ண அரசு தலைமையில் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கும் விழா நடந்து கொண்டிருந்தது.அப்போது பயனாளிகள் பட்டியலில் இருந்து
விஜயகுமார் என்ற பெயர் வாசிக்கப்பட்டதும்,கொத்தமங்கலம் மணவாளன் தெருவைச் சேர்ந்த விஜயகுமார் என்ற விவசாயி மேடையேறினார்.

அவருக்கு வழங்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டியை வாங்கிக் கொண்டார்.ஒரு விநாடி அங்கே நின்றவர்,டி.வி.யை பெரியண்ண அரசுவிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு,கூடவே ஒரு மனுவையும் கொடுத்தார்.ஏதோ கோரிக்கை மனு
கொடுக்கிறார் என்று அரசுவும் சாதாரணமாக வாங்கிப் படித்தார்.

அதில் மனிதனுக்கு டி.வி. என்பது பொழுதுபோக்கு சாதனம்தான். ஆனால் அதைவிட முக்கியமானது உணவு, உடை, உறைவிடம். தமிழகத்தில் மொத்தம் 88 துறைகள் இருக்கின்றன. இவை தன்னிறைவு அடைந்து விட்டனவா? குறிப்பாக, விவசாயிகளைப் பாதிக்கும் மின்சாரத்துறை தன்னிறைவு அடைந்து விட்டதா?

துறைகள் எல்லாம் தன்னிறைவு அடைந்த பிறகு மிதமிஞ்சிய பணத்தில் இந்த டி.வி.யை வழங்கியிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். இதற்கு மட்டும் எங்கிருந்து நிதி வந்தது?இந்தியாவின் முதுகெலும்பான விவசாயிகள் தமிழகத்தில் அதிகம் வசிக்கிறார்கள். டி.வி. வழங்கும் பணத்தை வைத்து விவசாயிகளுக்குத் தேவையான மின்சாரத்தைக் கொடுத்திருக்கலாம்.

தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டத்தைக் கண்டறிந்து போதுமான மின்சாரத்தை தடையின்றிக் கொடுத்து அந்த ஒரு மாவட்டத்தையாவது தன்னிறைவு அடையச் செய்திருக்கலாம். இலவசம் என்பது எங்களுக்கு வேண்டாம். தரமான
மருத்துவம், கல்வி, மும்முனை மின்சாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கினாலே போதும்.

அதை வைத்து நாங்களே சம்பாதித்து டி.வி.முதல் கார் வரை அனைத்தையும் வாங்கிக் கொள்வோம். எங்களுக்கு என்ன தேவையோ அதை நாங்களே பூர்த்தி செய்து தன்னிறைவு அடைந்து விடுவோம்.

விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, குடிநீர் பற்றாக்குறை, லஞ்சம், ஊழல் என்று ஆயிரக்கணக்கான குறைகள் இருக்கும்போது ஒரு நடமாடும் பிணமாக நான் எப்படி டி.வி. பார்க்க முடியும்? எனவே எனக்கு இந்த டி.வி. வேண்டாம்.
முதல்வர் கருணாநிதி மீது எனக்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும், அன்பும் உள்ளது.

எனவே,இந்த டி.வி.யை அவருக்கே அன்பளிப்பாகக் கொடுக்க இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.அவர் இதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என் மனம் மேலும் வேதனைப்படும். அரசு மற்றும் அதிகாரிகள் தங்கள் கடமைகளை சரியாகச்
செய்தாலே போதும். இந்தியா வல்லரசாகிவிடும்என்று நீண்டது அந்த மனு.

இதைப் படித்த பெரியண்ண அரசு முகத்தில் ஈயாடவில்லை.அருகில் இருந்த அதிகாரிகள் அதிர்ந்து போனார்கள். என்றாலும் அந்த மனுவையும் டி.வி.யையும் வாங்கி வைத்துக் கொண்டு மேலும் பரபரப்பை உண்டாக்காமல் விஜயகுமாரை அனுப்பி
வைத்தார் அரசு.

இதன் பின்னர் விஜயகுமாரிடம் பேசினோம்.

நான் ஒரு சாதாரண விவசாயி. விவசாயிகள் எல்லாம் மின்வெட்டால் பாதிக்கப்பட்டு விளைநிலத்தை ரியல் ஸ்டேட்காரன்கிட்ட வித்துட்டு நகரத்துல போய் கூலி வேலைக்கும்,ஹோட்டல் வேலைக்கும் அல்லாடிக்கிட்டிருக்கான்.

இந்த நிலை, நாளைக்கு எனக்கும் என் பிள்ளைகளுக்கும் வரப் போகிறது. எதிர்காலத்தை நினைத்து மனம் கலங்கிப் போய் இருக்கிறது. ராத்திரியில படுத்தால் தூக்கம் வர மாட்டேங்குது.

சாராயத்தை குடிச்சுட்டு, ஒரு ரூபாய் அரிசியை தின்னுட்டு உழைக்கும் வர்க்கம் சோம்பேறியாகிக்கிட்டிருக்கு.ரொம்ப சீப்பா கணக்குப் போட்டாலும் ஒரு டி.வி. ஆயிரம் ரூபாய்னு வச்சிக்குங்க. தமிழ்நாட்டில் ரெண்டு கோடி குடும்ப அட்டைகள் இருக்கு.2கோடி குடும்ப அட்டைக்கும் டி.வி. கொடுத்தால் இருபது லட்சம் கோடி செலவாகும்.இதை வைத்து 88 துறைகளையும் தன்னிறைவு அடையச் செய்தாலே போதுமே.

கனத்த இதயத்தோடும், வாடிய வயிறோடும் இருக்குறவனுக்கு எதுக்கு டி.வி.? அவன் பொழப்பே சிரிப்பா சிரிக்கும்போது அவன் டி.வி. பாத்து வேற சிரிக்கணுமாக்கும்.அதுனாலதான் நான் டி.வி.யை திருப்பிக் கொடுத்தேன்’’ என்றார்.

டி.வி.யை திருப்பிக் கொடுத்த கையோடு முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் ஒன்றையும் எழுதியிருக்கிறார் விஜயகுமார்.


அந்தக் கடிதத்தில் கொத்தமங்கலத்துக்கு வந்த டி.வி.க்கள் 2519. அதில் 2518 மட்டும்தான் வழங்கப்பட வேண்டும். எனக்கான ஒரு டி.வி.யை எனது அன்புப் பரிசாக நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்என்று குறிப்பிட்டு அதை ஃபேக்ஸ் செய்துள்ளார்.

மக்களிடம் இருந்து சுரண்டப்படும் பணத்தில் மக்களுக்கே கொடுக்கப்படும் லஞ்சம் தான் இலவசங்கள் என்பதை விவசாயி விஜயகுமார் பொட்டில் அடித்தாற்போல் தெளிவுபடுத்தியுள்ளார். மக்களை சோம்பேறிகளாக்கும் இலவசத்துக்கு எதிராக
போர் தொடுத்திருக்கும் அவரை பாராட்டத்தான் வார்த்தைகளே கிடைக்கவில்லை...!

Wednesday, December 1, 2010

அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை!

அறிஞர் அண்ணா தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் மிகுந்த புலமையுடையவர் என்று வெளிநாட்டுப் பத்திரிக்கைகள் எழுதின.
அமெரிக்காவிலிருந்து வெளியாகும் “தி சாட்டர்டே ஈவினிங் போஸ்ட்” என்ற பத்திரிக்கைக்கான நிருபர் அண்ணாவைப் பற்றி இவ்வாறு கேள்விப்பட்டதும்என்ன தான் ஆங்கிலம் அறிந்திருந்தாலும் மேல்நாட்டினர் அளவுக்குப் பேச முடியாது என்று இறுமாப்புடன் எண்ணிக் கொண்டிருந்தாராம்.

அப்போது அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்கள் அடங்கிய மத்திய அரசின்கூட்டம் ஒன்று டெல்லியில் நடந்தது.

அப்போது டெல்லி விமான நிலையத்திலேயேஅண்ணாவை மடக்கிப் பேட்டி காண்பது மட்டுமல்லாமல் அவரது ஆங்கிலப்புலமையையும் சோதித்துப் பார்த்து விடலாம் என்று எண்ணியஅந்த நிருபர் அவ்வாறே அண்ணாவைப் பேட்டியும் கண்டாராம்.
விமானத்திலிருந்து இறங்கி வெளியே வந்து கொண்டிருந்த அண்ணாவைப் பார்த்துத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாராம்.

சரி. கேள்விகளைக் கேளுங்கள் என்று அண்ணா சொன்னவுடன் அந்த நிருபர்கேட்டாராம். “டூ யு நோ யுனொ ?

சுவற்றில் அடித்த பந்தாகப் பட்டென்று பதில் வந்ததாம்.

ஐ நோ யுனொ.

யு நோ யுனொ.

ஐ நோ யு நோ யுனொ

பட் ஐ நோ யுனொ பெட்டெர் தேன் யு நோ யுனொ!

கேள்வி கேட்ட நிருபருக்கு மயக்கம் வராத குறை தான்.
தட்டுத்தடுமாறிக் கேட்டாராம்.எக்ஸ்கியூஸ் மீ. சற்று விளக்கமாகக் கூறுங்கள் என்றாராம்.

அண்ணா என்ன விளக்கம் சொன்னார் தெரியுமா?

I know UNO(United Nations Organisation).
You know UNO..
I know you know UNO.
But I know UNO better than you know UNO.

அறிஞர் அண்ணாவை ஒருதரம் “தமிழில் அடுக்கு மொழியில் விளையாடுகிறீர்களே, ஆங்கிலத்திலும் முடியுமா?” என்று கேட்டார்களாம்.

கொஞ்சமும் அயராமல் அவர், “ஏன் முடியாது.. எப்படிப்பட்ட வாக்கியம் வேண்டும்?” என்றாராம்.

Because என்கிற வார்த்தை தொடர்ந்து மூன்று முறை வருமாறு ஒரு வாக்கியம் சொல்ல முடியுமா?”
என்று கேட்டதும் அண்ணா அவர்கள் சுரீரென்று அடித்த பன்ச் :

‘No sentence ends with because, because, because is a conjunction’

You may also like