Monday, February 6, 2017

வான்... வருவான்... காற்று வெளியிடை!


வான்
வருவான்
தொடுவான்

மழைபோல் விழுவான்
மர்மம் அறிவான்
என்னுள் ஒளிவான்

அருகில் நிமிர்வான்
தொலைவில் பணிவான்

கர்வம் கொண்டால்
கல்லாய் உறைவான்
காதல் வந்தால்
கனியாய் நெகிழ்வான்
*
என்னோடி ருந்தால்
எவளோ நினைவான்
அவளோடி ருந்தால்
எனையே நினைவான்

என்னைத் துறவான்
என்பேர் மறவான்
என்னை மறந்தால்
தன்னுயிர் விடுவான்

கண்கள் கவிழ்ந்தால்
வெளிபோல் விரிவான்
கண்கள் திறந்தால்
கணத்தில் கரைவான்.
-- கவிப்பேரரசு வைரமுத்து

Wednesday, May 4, 2016

தள்ளிப் போகாதே...


ஏனோ வானிலை மாறுதே...
மணித்துளி போகுதே...
மார்பின் வேகம் கூடுதே...
மனமோ ஏதோ சொல்ல
வார்த்தை தேடுதே.....

கண்ணெல்லாம் நீயேதான் நிற்கின்றாய்....
விழியின் மேல் நான் கோபம் கொண்டேன்....
இமை மூடிடு என்றேன்....

நகரும் நொடிகள்.....
கசையடி போலே
முதுகின் மேலே
விழுவதினாலே...
வரிவரிக் கவிதை
எழுதும் வலிகள்
எழுதா மொழிகள்....... எனது...!.

கடல் போலப் பெரிதாக நீ நின்றாய்.....
சிறுவன் நான்,
சிறு அலை மட்டும்தான்....
பார்க்கிறேன்...... பார்க்கிறேன்......!

எரியும் தீயில் எண்ணெய் நீ ஊற்று...
நான் வந்து நீராடும் நீரூற்று !.

ஓ ஓ ஓ
ஊரெல்லாம் கண்மூடித் தூங்கும்
ஓசைகள் இல்லாத இரவே.....!
ஓ ஓ ஓ
நான் மட்டும் தூங்காமல் ஏங்கி
உன்போலக் காய்கின்றேன் நிலவே......!

கலாபம் போலாடும் கனவில் வாழ்கின்றேனே....!

கை நீட்டி..... உன்னைத்...
தீண்டவே பார்த்தேன்...
ஏன் அதில் தோற்றேன்...?

ஏன் முதல் முத்தம்
தரத் தாமதம் ஆகுது....?
தாமரை வேகுது....
தாமரை வேகுது....

தள்ளிப் போகாதே....
எனையும் தள்ளிப் போகச்
சொல்லாதே....
இருவர் இதழும்
மலர் எனும் முள்தானே.....!

தள்ளிப் போகாதே....
எனையும் தள்ளிப் போகச்
சொல்லாதே....
இருவர் இதழும்
மலர் எனும் முள்தானே.......!

தேகம் தடையில்லை... என நானும்
ஒரு வார்த்தை சொல்கின்றேன்....
ஆனால் அது பொய்தான்... என நீயும் 
அறிவாய் என்கின்றேன்....
அருகினில் வா.....!

(அடுக்கிசை)
கனவிலே தெரிந்தாய்
விழித்ததும் ஒளிந்தாய்
கனவினில் தினம் தினம் மழைத்துளியாய்ப் பொழிந்தாய்!
கண்களில் ஏக்கம்
காதலின் மயக்கம்
ஆனால் பார்த்த நிமிடம் ஒருவிதமான தயக்கம்
நொடி நொடியாய் நேரம் குறைய
என் காதல் ஆயுள் கரைய
ஏனோ ஏனோ மார்பில் வேகம் கூட
விதியின் சதி விளையாடுதே
எனை விட்டு பிரியாதன்பே.... எனை விட்டு பிரியாதன்பே
ஏனோ ஏனோ
ஏனோ ஏனோ
ஏனோ ஏனோ

அன்பே..

-- தாமரை 

Monday, March 30, 2015

கனவே கனவே கலைவதேனோ - David Movie Song





கோரமான மரணம் ஒன்று
உயிரைக் கொண்டுப் போனதே
உயரமான கனவு இன்று
அலையில் வீழ்ந்து போனதே
இசையும் போனது திமிரும் போனது
தனிமை தீயிலே வாடினேன்
நிழலும் போனது நிஜமும் போனது
எனக்குள் எனையே தேடினேன்

கனவே கனவே கலைவதேனோ
கரங்கள் ரணமாய் கரைவதேனோ
நினைவே நினைவே கரைவதேனோ
எனது உலகம் உடைவதேனோ

கண்கள் ரெண்டும் நீரிலே
மீனைப் போல வாழுதே
கடவுளும் பெண் இதயமும்
இருக்குதா அட இல்லையா

ஓ ஹோ நானும் இங்கே வலியிலே
நீயும் அங்கோ சிரிப்பிலே
காற்றில் எங்கும் தேடினேன்
பேசி போன வார்த்தையை
இது நியாயமா மனம் தாங்குமா
என் ஆசைகள் அது பாவமா

கனவே கனவே கரங்கள் ரணமாய்
நினைவே நினைவே கலைவதேனோ
எனது உலகம் உடைவதேனோ
-- மோகன் ராஜ்  (டேவிட்)

Thursday, July 3, 2014

மனைவி அமைவதெல்லாம்!



திருமணம் நிச்சயம் ஆனதிலிருந்தே எல்லா ஆண்களையும் போல நானும் ஒரு வித உற்சாகத்துடனும்,பரவசத்துடனும் நாட்களை கடத்தினேன். கனவுகள் வராத நாள் கிடையாது. வரும் பெண்ணை பற்றிய எதிர்பார்ப்புகளும்,கற்பனைகளும் சுவாரஸ்யத்தை கூட்டியது. நெறைய பாலகுமாரன் புத்தகங்களை சேமித்து வைத்து இருந்தேன் வருகிறவளுக்கு படிக்க கொடுக்க வேண்டும் ஒருவேளை அவளும் பாலகுமாரன் ரசிகையாக இருந்தா...ல் ..? நினைக்கவே சிலிர்ப்பாய் இருந்தது.

கிரிக்கெட்டில் நான் வாங்கிய பரிசுகளை எல்லாம் தூசு தட்டி எடுத்து பார்வையில் படும்படி வைத்தேன் . இளையராஜா பாடல்கள் தொகுப்புகளை வாங்கி வைத்தேன்.எஸ் .ஜானகி பாடல்களை தனியே பதிவு செய்து வைத்தேன்.கேரம் ,செஸ் போர்டு எல்லாம். இன்னும் பல விஷயங்கள் . ஒரு பெரிய கற்பனை கோட்டையில் வாழ துவங்கி இருந்தேன் .

ஒரு சுபயோக சுபதினத்தில் திருமணம் இனிதே நடந்தது..!
விருந்து முதற்கொண்ட சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்தது.

கீழ்க்கண்ட உரையாடல்கள் சில தினங்களில் சில தினங்கள் இடைவெளியில் நடந்தது.

புத்தகம் எல்லாம் படிக்கும் பழக்கம் இருக்கா ?

இல்லங்க நான் எந்த புக்கும் படிச்சது இல்ல..!

எந்த புக்கும் படிச்சது இல்லையா ?

ஆமாங்க எனக்கு இந்த புத்தகம் ஏதும் படிக்க புடிக்காது..!

இந்த குமுதம் ,ஆனந்த விகடன் இதெல்லாம் கூட படிச்சது இல்லையா ?

நான் + 2 படிச்சப்போ படிச்ச பாட புத்தகம் தான் நான் கடசியா படிச்சது அதுக்கப்புறம் எந்த புக்கும் படிச்சது இல்ல...!

எதோ ஜோக் சொன்னதுபோல அவள் சொல்லி சிரிக்க நான் வெளிறிபோனேன் ..!

எனக்கு மண்டை காய்ந்துபோனது எந்த ஒரு புத்தகமும் படிகாதவளிடம் போய் பாலகுமாரனை பற்றி பேச முடியுமா..? சேர்த்து வைத்து இருந்த புத்தகங்கள் ...?ஒரு அட்டைப்படத்தில் பால குமரன் என்னை கவலையுடன் பார்ப்பதாக தோன்றியது ..!

கிரிக்கெட்டில் நான் வாங்கிய பரிசுகளை பார்வையில் படும்படிதான் வைத்து இருந்தேன்..! அதை பற்றி அவள் கேட்கவேண்டும் நான் பீற்றி கொள்ளவேண்டும் இதுதான் திட்டம் .

ஆனால் ..? எதோ வீட்டில் உள்ள காலண்டரை பார்ப்பது ,வால் கிளாக்கை பார்ப்பதுபோல அந்த பரிசுகளை கோப்பைகளை அவள் கண்டுகொள்ளவே இல்லை.

அப்புறம் வேறு வழி இல்லாமல் நானே சொல்ல ஆரம்பித்தேன் ..!

இந்த கப் எல்லாம் நான் வாங்கினது தெரியுமா ..?

எதுக்கு வாங்குனீங்க..?

இதெல்லாம் நான் கிரிக்கெட் வெளையாடி வாங்கினது
ஒனக்கு கிரிக்கெட் புடிக்குமா ..? கிரிக்கெட் பார்ப்பியா ..?

எங்க வீட்டுல எல்லாரும் கிரிக்கெட் பார்ப்பாங்க எனக்கு மட்டும் கிரிக்கெட் சுத்தமா புடிக்காது ..!

(அதானே எனக்குன்னு இப்படித்தான் வாய் க்கனும்னு இருக்கும்போது எப்படி கிரிக்கெட் புடிக்கும் )

யாரோ பின் மண்டையில் பேட்டால் அடித்தது போல இருந்தது..! நொந்துபோனேன்..!

இந்த பாடகர் - பாடகிகள்ல உனக்கு யார புடிக்கும்..?

ம்ம்... இவங்களத்தான் புடிக்கும்னு சொல்ல முடியாது பொதுவா எல்லா பாட்டும் கேப்பேன்..!

உனக்கு புடிச்ச பாட்டு ஒன்னு சொல்லேன்..!

அட போங்க திடீர்னு இப்படி கேட்டா எப்படி சொல்லுறது ..?

சரி எஸ் .ஜானகி புடிக்குமா ?

யாரு கெழவி போல இருக்குமே அதுவா ?

எஸ் .ஜானகியை கெழவி ன்னு சொன்னதும் எனக்கு செம கோவம் ...!எனக்கு புடிச்ச பாடகி அவரை கிழவின்னு சொன்னதும் என்னால அதை பொறுத்துக்க முடியல. என்ன செய்ய எல்லாம் விதி...!

என்னை நானே நொந்து கொள்வதை தவிர வேறு வழியில்லை அவள்மேல் கோபப்பட முடியவில்லை ஆனால்..? அவளுக்கு கோவம் அதிகம் வரும் முன்கோபி என் பாதுகாப்பும் முக்கியமில்லையா எதுவும் எனக்கு பிடிக்கவில்லை.

மனைவி விசயத்தில் மிகுந்த ஏமாற்றம் ...!துளியும் எனக்கு எந்த விதத்திலும் பொருத்தமில்லை .

ஆணித்தரமாய் எனக்கு தோன்றியது இதுதான்

இவள் எனக்கு ஏற்ற ஜோடிஇல்லை .

கணவன் மனைவி இருவரும் இரட்டை மாட்டு வண்டியைபோல என்று சொல்வார்கள் ஒரு மாடு சரியில்லாமல் போனாலும் குடும்ப வண்டி சரியாக ஓடாது என்று. உண்மைதான். நான் இப்படி முடிவு எடுத்தேன் பேசாமல் அவளையும் வண்டியில் தூக்கி உட்கார வைத்துவிட்டு ஒற்றை மாடாக வண்டியை ஓட்ட வேண்டியதுதான். வேறு என்ன செய்வது ? எங்களுக்குள் எந்த கெமிஸ்ட்ரியும் ஒர்க் அவுட் ஆகவில்லை..!

பெரிய சுவாரசியம் ஏதுமின்றி நகர்ந்தன நாட்கள் சில மாதங்களில் மனைவி கர்பவதியகவே நிலைமை மாற தொடங்கியது. வீடு உற்சாகத்தில் திளைத்தது ஆளாளுக்கு அவளை கொண்டாட ஆரம்பித்தோம்.

மாசமா இருக்கும்போது என்னவெல்லாம் புடிக்குமோ அதெல்லாம் வாங்கி கொடுக்கணும் புடிச்சத சமைச்சு போடணும் - இது என் அம்மா

நானும் அவளிடம் கேட்கிறேன்

உனக்கு என்னவெல்லாம் சாப்பிட புடிக்கும் சொல்லு

அதெல்லாம் ஒன்னும் வேணாம்

இல்ல சொல்லு நான் வற்புறுத்தி கேட்கிறேன்

பிடிக்குமென சிலதை சொல்ல

முன் சமயங்களில் என்ன சமையல் செய்யலாம் என்ற விவாதம் வரும்போது இதையெல்லாம் சொல்லி இருக்கிறாள் நானும் சாதாரணமாய் அதையெல்லாம் மறுத்து இருக்கிறேன் ஆனால் அவளுக்கு பிடிக்குமென சொன்னதில்லை.

இதெல்லாம் உனக்கு புடிக்குமா இதுவர சொன்னதே இல்ல ..?

ம்ம்ம் இப்போதானே கேக்குறீங்க.

அவள் சிரித்து கொண்டே சொல்ல எனக்குள் சுளீரென ஒரு குற்ற உணர்ச்சி ஏற்பட்டது.

பிரசவம் நெருங்க இயல்பாய் ஒரு பதற்றம் தொற்றி கொண்டது இன்னும் சில தினங்களில் இங்கே ஒரு குழந்தை இருக்கும் என்ற எண்ணமே ஆனந்த கூத்தாட வைத்தது.

நாங்கள் விரும்பிய படியே அழகிய பெண் குழந்தை நார்மல் டெலிவரிதான் .

நான் நினைத்து இருந்தேன் பிரசவம் ஆன பெண்கள் ஒரு வாரம் பத்துநாள் என படுக்கையிலேயே இருப்பார்கள் என ஆனால் இவள் மறுநாளே சாதரணமாக நடமாட ஆரம்பித்தாள் யாராவது பெரியவர்கள் குழந்தையை பார்க்க வந்தால் சொல்ல சொல்ல கேட்காமல் கட்டிலிலிருந்து இறங்கி எழுந்து நின்று கொள்வாள் மரியாதையை நிமித்தமாய்.

இவளில் இந்த செய்கை குறித்து உறவினர்கள் புகழ்ச்சியாய் பேச எனக்கோ மிகவும் பெருமையாய் இருந்தது.

பெண்களின் குணம் எப்படி இருந்தாலும் தாய் ஆன பிறகு எல்லா பெண்களும் ஒரேமாதிரித்தான் இருக்கிறார்கள். கோபம்,ஆத்திரம் இவைகள் எல்லோருக்கும் பொதுவானதுதான் ஆனால் குழந்தை கவனிப்பில் எப்போதும் பொறுமை மட்டுமே காட்டுகிறார்கள் நள்ளிரவில் குழந்தை அழுதாலும், மலம் கழித்தாலும் கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் கவனிக்கும் தன்மை இயல்பாகவே வந்து விடுகிறது.

குழந்தையையும் கவனித்துகொண்டு எனக்கு செய்யும் பணிவிடைகளிலும் எந்த குறையும் வைக்கவில்லை .

தாய்மை என்ற விசயத்தை என் தாயிடம் உணர்ந்ததைவிட மனைவியிடமே அதிகம் தெரிந்து கொள்ள முடிந்தது . இப்போது அவள்மேல் ஒரு மரியாதையை ஏற்பட துவங்கியது .

வீட்டு வேலைகள் குழந்தை வளர்ப்பு என அவள் சுமை எனக்கு புரிந்தது..!

சில வருடங்கள் போக...! இப்போது இரண்டாவது குழந்தை...! முதல் குழந்தை நார்மல் டெலிவரி ஆனால் இரண்டாவது சிசேரியன்.

இரண்டாவது குழந்தை பிறந்தவுடன் மயக்கத்தில் இருக்கும் அவளை பார்க்க செல்கிறேன் தூக்கம் போலவும் இல்லாமல் ,மயக்கம் போலவும் இல்லாமல் மூக்கில் எதோ ஒரு குழாய் இருக்க அவள் இருந்த நிலை என்னை ஒரு மாதிரி ஆக்கிவிட்டது. அப்போது நினைத்து கொண்டேன் இவளிடம் இனி எதற்கும் கோபப்பட கூடாது என்ன சொன்னாலும் பொறுத்து கொள்ள வேண்டும் என்று ..!

சில பெண்கள் நினைத்து கொள்ளலாம் கணவன் தன்னிடம் அடங்கி போகிறான் என்று ..! அப்படி அல்ல...! சில நேரங்களில் மனைவி செய்த தியாகங்களுக்காகவும் அவள் அடைந்த சிரமங்களுகாகவும் மனைவிக்கு செலுத்தும் நன்றி கடனே அந்த அடங்கி போதல். மனைவியை ஜெயிக்க விட்டு அதனால் அவள் அடையும் சந்தோசத்தை ரகசியமாய் பார்த்து ரசித்து கொள்ளுதல் எல்லாம் ஒரு நன்றி கடன்தான் .

இரண்டு குழந்தைகள், வீட்டு வேலைகள், குழந்தை படிப்பு, பாடம் சொல்லி கொடுத்தல், இதற்க்கு இடையே நான் செய்யும் அலும்புகள் எல்லாவற்றையும் சமர்த்தாக கவனித்துகொள்ளும் அவளிள் அந்த மனைவி ,இல்லத்தரசி என்ற ஸ்தானத்தின் பிரம்மாண்ட விஸ்வ ரூபத்தின் முன் ''நான்'' கொஞ்ச கொஞ்சமாக நலிந்து கொண்டு இருந்தேன். பால குமாரன் ,கிரிக்கேட் எஸ் .ஜானகி எல்லாம் என் கவனிப்பில் இருந்து விலகி செல்ல ..!

ஒற்றை மாட்டு வண்டியாக குடும்பத்தை ஓட்ட நினைத்தேன் ஆனால் சில சமயங்களில் அவள் ஒற்றை மாடாக வண்டியை இழுக்க நான் அதில் பயணம் செய்வதாக உணர்ந்தேன்.!

எங்களுக்குள் எந்த கெமிஸ்ட்ரியும் ஒர்க் அவுட் ஆகவில்லை என நினைத்தேன்

ஆனால்...! இப்போது எங்களுக்குள்...!

தமிழ் ,ஆங்கிலம் ,வரலாறு ,புவியியல்,இயற்பியல்,தாவரவியல் ,விலங்கியல் வேதியல் எல்லாம் ஒர்க் அவுட் ஆகி போனது ..


-- படித்ததில் பிடித்தது.. முகநூலிளிருந்து..

Monday, September 23, 2013

நீ எதைக் கொண்டு வந்தாய்.. இழப்பதற்கு?

 
தலைசிறந்த பொருளாதார நிபுணரான ஆர்.கே.சண்முகம் செட்டியார் அவர்கள் தலைமையில் ஒரு சிறு சேமிப்புத் திட்ட ஆதரவு விழா, ராஜாஜி ஹாலில் நடைபெற்றது.

அந்த விழாவில் பேசிய கலைவாணர், ஒரு சந்தேகத்தை எழுப்பினார்.

"ஓர் ஓட்டலில் வந்து இறங்கிய பிரயாணி, கேஷியரிடம் 100 ரூபாய் நோட்டைக் கொடுத்து, ஊருக்குப் போகும்போது வாங்கிக் கொள்வதாகச் சொன்னார். கேஷியர் தர வேண்டிய பாக்கியைக் கேட்டு ஒரு மளிகைக் கடைக்காரர் வந்தார். உடனே, அந்த 100 ரூபாயை எடுத்து அவரிடம் தந்தார் கேஷியர்.

மளிகைக் கடைக்காரர் அந்த நோட்டை, தனக்கு சிகிச்சை அளித்த டாக்டருக்குத் தந்தார். மறுநாள் டாக்டர், ஒரு டீ பார்ட்டி வகையில் அந்த ஓட்டலுக்குத் தர வேண்டிய பாக்கிக்காக, அதே நோட்டை ஓட்டலுக்குக் கொடுத்து அனுப்பினார்.

அன்று மாலை, ஓட்டலில் தங்கியதற்கான பணத்தைத் தந்துவிட்டு, அதே 100 ரூபாய் நோட்டைத் திரும்ப வாங்கிக்கொண்டார் அந்தப் பிரயாணி. அப்போது கேஷியரிடம், 'இது ஒரு செல்லாத நோட்டு. செலவாணி ஆகிறதா என்று பார்ப்பதற்காகவே உங்களிடம் தந்தேன்' என்று சொல்லிக் கொண்டே, அந்த நோட்டைக் கிழித்தெறிந்தார். இதில் யாருக்கு நஷ்டம் என்பதைத் தலைவர் தெரிவிக்கவேண்டும்" என்றார் என்.எஸ்.கே.

"அதுதான் செல்லாத நோட்டு ஆயிற்றே! எனவே, யாருக்கும் நஷ்டம் இல்லை" என்றார் சண்முகம் செட்டியார்.

"அப்படியானால் ஓட்டல்காரர், மளிகைக் கடைக்காரர், டாக்டர் இவர்களுக்கெல்லாம் 100 ரூபாய் கடன் அடைந்திருக்கிறதே?" என்றார் கலைவாணர்.

அப்பொழுது தலைவர் சொன்னார்.. "இதற்குப் பெயர்தான் நாணயம் என்பது! அதன்மேல் வைக்கக்கூடிய மதிப்புதான் நாணயம். உண்மையாகப் பார்க்கப் போனால், நோட்டுக்குக் காகித விலைதான் உண்டு. அதற்கு நாம் 100 ரூபாய் மதிப்புக் கொடுக்கிறோம்" என்று கடினமான அந்த விஷயத்தை இலகுவாக விளக்கினார் செட்டியார்.

இந்தக் கருத்தைப் 'பணம்' என்ற படத்தில் கையாண்டார் கலைவாணர்.
-- விகடன்

Sunday, September 1, 2013

ஒரு 'பிட்டு' காதல் கதை

 
"அண்ணே! நீங்க எனக்கு கதை சொல்லி ரொம்ப நாள் ஆச்சு. எதாச்சும் சுவாரசியமான கதை இருந்தா சொல்லுங்கண்ணே"

"கதை சொல்றேன்! அது சுவாரசியமா இருக்கா, இல்லியான்னு நீதான் சொல்லணும்."

"சரி சொல்லுங்க"

"இது என்னோட காதல் கதை. இந்த கதை நடக்கும்போது நான் +2 படிச்சுக்கிட்டு இருந்தேன்."

"என்னது படிச்சீங்களா?"

"சரி +2 க்ளாஸ்ல தினமும் போய் உக்காந்துகிட்டு இருந்தேன். அப்போ என்னோட க்ளாஸ்ல ப்ரீத்தின்னு புதுசா ஒரு பொண்ணு வந்து சேந்தா. அழகுன்னா அழகு அப்படி ஒரு அழகு ஒரு பக்கம் இருந்து பாத்தா அப்பிடியே த்ரிஷா மாதிரி இருப்பா."

"அப்போ இன்னொரு பக்கம் இருந்து பாத்தா கமலா காமேஷ் மாதிரி இருப்பங்களாண்ணே."

"டேய்! மூடிகிட்டு கதையை கேளு."

"சரி சரி சொல்லுங்க. அந்த பொண்ணு வந்ததும் பசங்க கிளாஸ் கட் அடிக்கிறதே குறைஞ்சு போச்சு. எல்லாரோட கண்ணும் அந்த பொண்ணு மேலதான். நல்ல வேலையா எங்க பள்ளி கூடத்துல பசங்களும் பொண்ணுங்களும் பேசிக்க கூடாதுன்னு ரூல் இருந்ததால அவ தப்பிச்சா"

"புரியுது. ஈ மொய்க்காத பலா பழம் இருக்கா என்ன?"

"இப்பிடி வாழ்க்கை போய்க்கிட்டு இருக்கும்போதுதான் பள்ளிகூடத்தில ரிவிசன் டெஸ்ட் வந்துச்சு. பரீட்சை எழுதலாமுன்னு போனவனுக்கு பெரிய அதிர்ச்சி"

என்ன ஆச்சு

"புதுசா வந்த பொண்ணு பேரு என்னோட பேருக்கு அடுத்து வரதால அவளை என்னோட டெஸ்க்ல உக்கார வச்சுட்டாங்க"

"அது அதிர்ச்சியா? இன்ப அதிர்ச்சின்னு சொல்லுங்க"

மண்ணாங்கட்டி. வழக்கமா என் கிட்ட ஒரு பையன் உக்காந்து இருப்பான். நானும் அவனும்தான் பிட் ஷேர் செஞ்சுக்குவோம். இப்போ இவ கிட்ட இருந்தா "நான் எப்பிடி பாஸ் ஆகுறது."

"ஐயோ பாவம்!"

"கஷ்டம்தான்"

"ஒரு வழியா நானே கை வலிக்க பிட் எழுதி எல்லா பரீட்சையையும் சமாளிச்சிட்டேன். ஆனா கடைசி பரீட்சை பிசிக்ஸ். ரொம்ப கஷ்டமா கொஸ்டின் பேப்பர் செட் பண்ணிட்டாங்க"

"ம்"

"நான் எழுதிட்டு போன பிட்டை வச்சு என்னால அரை மணி நேரம் கூட தாக்கு பிடிக்க முடியல. லேசா திரும்பி அவளை பார்த்தேன். அவ கடகடன்னு எழுதிகிட்டே இருக்கா."

"ஆமா! பொண்ணுங்க எப்பவுமே நல்லா படிக்கும்ல."

"அப்படிதான் நானும் நெனச்சேன். இப்போ நான் எழுதி இருந்த பதிலை வச்சு கட்டாயம் பாஸ் பண்ண முடியாது. எனக்கு என்ன செய்றதுன்னே தெரியல. சூப்பர்வைசர் அசந்த நேரமா பாத்து லேசா பெஞ்சை தட்டி அவளை திரும்பி பாக்க வச்சேன்."

"ஆகா! அண்ணல் நோக்கியதை அண்ணியும் நோக்குறாங்க போல"

"அவ திரும்பினதும் அவ கிட்ட லேசா பேப்பரை காட்டேன்னு சிக்னல் பண்ணேன்."

"பேப்பரை காட்டேன்னுதான சிக்னல் பண்ணீங்க"

"ஆமா! பேப்பரைதான்"

"காட்டுனாங்கள"

"காட்டுனா"

"அப்போ அவங்க புண்ணியத்துல பாஸ் ஆகிட்டீங்கன்னு சொல்லுங்க"

"கிழிச்சேன். பேப்பர் முழுக்க ஸ்ரீராமஜெயம், ஸ்ரீராமஜெயம்னு மட்டும்தான் அவ எழுதி இருந்தா"

"ஹா ஹா! அப்புறம் என்ன செஞ்சீங்க"

"என்ன செய்றது? ஏதோ பத்து,பதினஞ்சு மார்க்காச்சும் அவ எடுக்கட்டும்னு என் கைல இருந்த பிட்டை அவளுக்கு பாஸ் செஞ்சேன்."

"அவங்க வேணாமுன்னு சொல்லலியா"

"அவளா? அவ ஏதோ பிட் அடிக்கறதுல எக்ஸ்பெர்ட் மாதிரி அதை வாங்கி அவ்வளவு நேக்கா பிட் அடிச்சா. அவ மூஞ்சியை பாத்தா அவ பிட் அடிக்கிறான்னு எவனும் சொல்ல மாட்டான்."

"சரி! இதுல எங்க காதல்"

"இரு! அவ என் கிட்ட பிட் வாங்குனதும்தான் எனக்கு அப்போதான் எனக்கு இவ கிட்ட லவ் சொல்ல இதுதான் சரியான நேரமுன்னு. ஒரு பேப்பரை எடுத்தேன். பென்சிலால ஒரு இதயத்தை வரைஞ்சு அதுல அம்பு விட்டேன். எழுதுன பேப்பரை அவ கிட்ட பாஸ் பண்ணேன்."

"பரீட்சை ஹால்லயா? ஏன் அவ்வளவு அவசரம்."

"இப்போ லெட்டர் குடுத்தாதான் அவளால கத்தி ஊரை கூட்ட முடியாது. குடுத்த பேப்பரை வெளியே எடுத்துட்டு போய் அவங்க அப்பா கிட்ட போட்டு தரவும் முடியாது. திரும்ப என் கிட்டதான் குடுத்து ஆகணும். அதை நான் அழிச்சுட்டு ஏதாவது எழுதிட்டு கட்டி கொடுத்துடுவேன். ரிஸ்க் இல்லாம லவ்வை சொல்லிடலாம்."

"அபார மூளைண்ணே உங்களுக்கு. இந்த மூளையை படிப்புல காட்டி இருந்தா நீங்க பெரிய ராக்கெட் எஞ்சினியர் ஆகி இருப்பீங்க. சரி அதை படிச்சுட்டு என்ன சொன்னாங்க"

"நான் பேப்பரை குடுத்துட்டு அவ படிக்கிறாளான்னு பாத்துகிட்டே இருந்தேன். அவ அதை பாத்த உடனே இன்னொரு பேப்பரை எடுத்து பென்சிலால ஏதோ எழுதுனா. என் கிட்ட அந்த பேப்பரை பாஸ் செஞ்சா"

"என்ன எழுதி இருந்துச்சு அந்த பேப்பர்ல? லவ் ஓகே ஆயிடுச்சா"

"நானும் ஓகே சொல்லிதான் எழுதுறான்னு நெனச்சேன். ஆனா இங்கதாண்டா ட்விஸ்ட். அவ அந்த பேப்பர்ல எனக்கு படம் வரைய சரியா வராது. நீங்க குடுத்த படத்தையே நான் கட்டி குடுத்துடறேன். நீங்க உங்களுக்கு வேற படம் வரைஞ்சுகுங்க அப்பிடின்னு எழுதி இருந்தா. அவளுக்கு எப்பிடி புரிய வச்சு அந்த பேப்பரை வாங்குறதுன்னு தெரியல. கடைசில கட்டியே குடுத்துட்டா"

"அடி பாவி! அவளுக்கு பிசிக்ஸ்க்கும், பயாலஜிகுமா வித்தியாசம் தெரியாது?"

"அந்த கூமுட்டைக்கு அதுவே தெரியலையே".

"அப்புறம் என்ன ஆச்சு? பேப்பர் திருத்தும்போது நீங்க ரெண்டு பேருமே கையும் களவுமா மாட்டிகிட்டீங்களா?"

"அது நடந்து இருந்தா கூட பரவாயில்லயே"

"அப்புறம் என்ன ஆச்சு?"

"பரீட்சை ரிசல்ட் வரும்போது நான் ஃபெயில். அவ பாஸ் ஆகி இருந்தா. இப்போ அவ அந்த பிசிக்ஸ் வாத்தியாரை கல்யாணம் செஞ்சுகிட்டு ரெண்டு பிள்ளைங்களோட சந்தோசமா வாழ்ந்துகிட்டு இருக்கா"

"அட பாவமே! பாவம்னே நீங்க. நீங்க குடுத்த லவ் லெட்டரால அந்த பொண்ணு ப்ரீத்தி பிசிக்ஸ் வாத்தியார் கூட சேந்து லைப்ல செட்டில் ஆகிடிச்சு. ரொம்ப சோகமான கதைதான்."

"ஆமாடா! இந்த மாதிரி ஒரு சோகம் யாரு வாழ்க்கையிலயும் வந்திடவே கூடாது."
-- முகநூலிருந்து 
-- முதன்மை பதிவு (http://vathikuchi.blogspot.in/2013/08/u.html)

Friday, May 24, 2013

கிராமத்து `மாயன்’கள் !


`மாயன்’.. 2012 ல் உலகம் அழியப்போகுதுனு பீதியை கிளப்புனப் பயலுக. அதுக்கப்புறம் தான் 2012 டிசம்பர் வரைக்...கும் எல்லோரும் மாயன் பீதி பிடிச்சுச்சு.

ஆனா திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்ட மக்களுக்கு மாயன்களோடு பல தலைமுறைகளா உறவு உண்டு. இந்த மாயன் நீங்க நினைக்கிற பீதி கிளப்புன மாயன் அல்ல.. இவர் மாயாண்டி சுடலை. தென் மாவட்ட மக்களின் மூதாதையர்களில் பெரும் வீரனாக இருந்திருக்க கூடும். இப்படி ஒவ்வொரு பகுதிக்கும் பல எல்லைக் காத்த வீரர்கள் இருந்திருக்கிறார்கள்.

திருநெல்வேலியில் பெரும்பாலான பகுதி மக்களுக்கு அந்த மாயண்டி சுடலை தான் தலைவன். வீட்டில் குழந்தைகளுக்கு `சுடலை’ என்ற பெயர் தவறாது இருக்கும். பள்ளிகளில் ஒரே வகுப்பில் சுடலை, சுடலை முத்து.. என ஏகப்பட்ட சுடலைகள் இருப்பார்கள். இன்சியல் மூலமே அவர்கள் பிரித்து அறியப்படுவார்கள். இப்போது அந்த மாதிரி பெயர்கள் வைப்பது குறைந்திருக்கும் என நினைக்கிறேன். தற்போது குழந்தைகளுக்கு வடமொழி `ஷ்’களில் முடியும் வடமொழிப் பெயர்களை வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

சுடலை, முனியாண்டி, முத்தாரம்மன், பேச்சியம்மன், மாசனம், இசக்கியம்மன், உய்க்காட்டுச் சுடலை என்று கிராம மக்களின் கடவுள்களின் பெயர்களே சுவாரஸ்யமானது. அதுவும் அந்த கடவுள்களுக்கு (அல்லது பாட்டன், பூட்டி) கிராமங்கள் தோறும் சொல்லப்படும் விதவிதமான கதைகளையெல்லாம் தொகுத்தால் சுவாரஸ்யங்கள் அடங்கிய களஞ்சியமாகலாம். சிறுவயதில் இந்த மாதிரியான கதைகளை கேட்டுக் கேட்டு வளர்ந்தவன். ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கதை சொல்லி தாத்தாவோ பாட்டியோ இருப்பார்கள். அவங்க கதையை சொல்ல ஆரம்பிச்சாப்போதும்.. சுடலையே நம்ம பக்கத்துல வந்து நிக்குறமாதிரி இருக்கும்.

``முனியாண்டி பனமரம் ஒசரத்துல இருப்பான்.. கால்ல சலங்கையைக் கட்டிக்கிட்டு ஜல் ஜல்லுனு.. நடந்து வருவான் ’.. `வில்வண்டிப் பூட்டிக்கிட்டு வெள்ளைக்குதிரையில சுடலை பறந்து வர்றான் பாரு..’’ என்று தாத்தாக்கள் சொல்லும் கதைகள் அவர்களிடத்திலிருந்து மட்டும் வந்ததல்ல.. பல தலைமுறைகள் கடந்து வரும் வரலாறு.
இடையில் கதை சொல்லிகளின் எக்ஸ்ட்ரா டிங்கிரி பிங்கிரி கிராஃபிக்ஸ்கள் சேர்க்கப்பட்டு சுவராஸ்யமான கதைகளாக்கப்பட்டிருக்கும். இன்னைக்கு பத்திரிகைகளில் எழுதும் பல அப்பாடக்கர் எழுத்தாளர்கள் எல்லாம் இந்த கதை சொல்லிகளிடம் பாடம் படிக்க வேண்டும்.. அவ்வளவு பிரமாதமாக கதை சொல்வார்கள்.

பனையையும் அந்த மக்களையும் பிரிக்க முடியாது எனபதால் அவர்களின் சாமிகளுக்கு கோவிலாக இருப்பதும் பனை தான். இந்த தெய்வங்களுக்கு பீடம் எல்லாம் பனையின் அடிவாரம் தான். பனையை வைத்து தான் சாமிகளையும் அடையாளப்படுத்துவார்கள். பெருவாரியாக ஒத்தப்பனைகள் தான் இந்த சாமிகளின் இருப்பிடம்.

இந்த மக்கள் தெய்வங்களை எல்லாம் சிறு தெய்வங்கள் என்று அழைப்பதே தந்திரமான அரசியல். அந்த மக்களைப் பொருத்தளவில் சுடலைகளும், முத்தாரம்மன்களும், இசக்கியம்மன்களும், முனியாண்டிகளும் பெரும் தெய்வங்கள் தான். அவர்களின் மூதாதையர்களை சிறு தெய்வம் என்று சொல்ல நீங்கள் யார்..

அவர்கள் தங்கள் கடவுளான மூதாதையர்களிடம் வாக்குவாதம் செய்வார்கள்.. ஏன் இந்த வருசம் மழை வரலனு சண்டை போடுவார்கள்.. போ.. இனி உன்ன பார்க்க வரமாட்டேன் என்று கோபிப்பார்கள்.. ஊரை செழிப்பாக்குனாத்தான் உனக்கு கொடை.. இல்லனா கிடையாது என்று மிரட்டுவார்கள்.. இன்னும் வயித்துல புழு பூச்சி இல்ல.. பிள்ளப்பொறந்தா உன் பேரை வைக்குறேன்.. கொடை கொடுக்கேன் என்று பம்முவார்கள்.. ஊர் செழிப்பானால் தான் இந்த எல்லைச் சாமிகளும் செழிப்பாவார்கள்.

அப்படி நெல்லையில் பிரபலமான ஒரு எல்லைச்சாமி `சிறுமளஞ்சி ஒத்தப்பனை’ சுடலை ஆண்டவர்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரிக்கும் வள்ளியூருக்கும் இடையில் இருக்கிறது சிறுமளஞ்சி என்ற ஊர். இந்த ஊர் பிரபலமடைஞ்சதுக்கு காரணமே ஒத்தப்பனை சுடலை தான். இந்த சுடலையின் மூல ஸ்தலம் விஜயநாராயணத்திலிருக்கிறது. அங்கிருந்து மண் எடுத்து வந்து சிறுமளஞ்சியில் வைத்து வழிபட ஆரம்பித்திருக்கிறார்கள். 80 ஆண்டுகளுக்கும் மேலாக கொடைவிழா நடத்தப்பட்டு வரும் அந்த கோவிலின் முதல் சாமியாடி மாயாண்டி. அதன்பிறகு அவரது மகன் முத்துராஜ் ஆடினார். இந்த சுடலையின் சிறப்புகள் மற்றும் மிரட்டல்கள் கதைகள் ஏராளம் உண்டு.

இந்த கோவிலை நிர்வகிப்பவர்கள் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் எந்த சாதி பேதமில்லாமல் அனைவரும் கலந்து கொள்வதை காணமுடியும். இந்த கோவிலின் கொடைவிழா என்றால் அந்த பகுதி முழுக்க கொண்டாட்டம் தான். பல மைல்கள் தாண்டி எங்கெங்கோ இருந்தெல்லாம் ஆட்கள் வருவார்கள். சிறப்பு பேருந்துகள் விடப்படும்.

பெரிய மனுஷியான பெண் பிள்ளைகள் புது தாவணியுடன் வெட்கம் தின்ன ஒரு பக்கம், அரும்புமீசை வாலிபர்கள் ஒரு பக்கம், பெரியவர்கள் குழந்தைகள் பெண்கள் என ஊரே ஜெகஜோதியாக இருக்கும்.

வளையல் கடையில் ஆரம்பித்து திருவிழா சீனுக்கு தேவையான அத்தனை கடைகளையும் அங்கு பார்க்கலாம். ஒரு பக்கம் இன்னிசை கச்சேரி, இன்னொரு பக்கம் பட்டிமன்றம், கரகாட்டம், வில்லுப்பாட்டு, திரைப்படம் போடுதல் என்று எங்கு திரும்பினாலும் கொண்டாட்டமாக இருக்கும்.

கொடைவிழாவின் ஒரு பகுதியாக சாமியாடுபவர் இரவு 12 மணிக்கு சுடுகாட்டுக்கு வேட்டையாட சென்றுவிட்டு வருவார். அதன்பிறகு சாமக்கொடை ஆரம்பமாகும். நேர்ந்திருப்பவர்கள் தங்கள் ஆடுகளுடன் வரிசையாக நிற்பார்கள். பலி பீடத்தில் ஆடுகள் மார்பு பிளக்கப்பட்டு சாமியாடி ரத்தம் குடிப்பார். விடிய விடிய நடக்கும் இந்த பூஜை.

கடந்த முறை ஜெயலலிதா ஆட்சியில் ஆடு கோழி பலியிடக்கூடாது என்று சட்டம் போட்ட சமயத்தில் இந்த கோவிலுக்கு கொடை வந்தது. பலி கொடுக்க போலீஸ் எதிர்ப்பு தெரிவித்ததால் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் பிரச்னை ஆனது. சுடலையை பகைச்சவங்க ஆட்சியை இழப்பாங்க என்ற சாமியாடி முத்துராஜ் சாபம் கொடுத்ததும், ஜெயா ஆட்சியை இழந்ததும் கூட நடந்தது.

சிறுவயதில் இந்த கோவில் கொடைக்கு செல்லும்போதெல்லாம், சாமி சுடுகாட்டுக்கு தீப்பந்தத்துடன் வேட்டைக்குப் போவது, விடிய விடிய பலி கொடுக்கப்படும் ஆடுகளின் மார்பிலிருந்து பீய்ச்சி அடிக்கும் ரத்தத்தை வாய்வைத்து குடிப்பது போன்ற காட்சிகளை எல்லாம் பார்க்க அப்போது `திகிலாக’ இருக்கும். சாமி வேட்டைக்குப் போய்விட்டு வரும்போது வழியில் குறுக்கே போகக்கூடாது என்பார்கள். மீறி போனால் சங்கு தான் என்று திகிலுக்கு திகில் ஏற்றுவார்கள்.

இந்த திகிலை எல்லாம் தாண்டி அந்த திருவிழாவுக்கு வரும் ஜோவென்ற மக்கள் கூட்டம் , கரகாட்டம், இன்னிசைக் கச்சேரி என்று சுற்றி பார்த்து ஓய்ந்து கடைகளில் கிடைத்ததை சாப்பிட்டுவிட்டு புல்தரையில் தூங்கி எந்திரிப்பது காலையில் கிணத்துலயோ குளத்துலயோ ஆட்டம் போட்டுட்டு வீடு திரும்புவது எனக்கு பிடித்தமானது.

பின்னர் பெரியாரை பற்றி படிக்க ஆரம்பித்த ஆரம்ப காலங்களில் இந்த விசயங்களையெல்லாம் கிண்டலடிக்கவும் செய்திருக்கிறேன். வாசிப்பு அனுபவம் மாறவே நாம டார்கெட் வைக்க வேண்டியது இந்த மாயன்களை இல்லை என்பது புரிந்தது.

``எல மக்கா.. எப்படிருக்க.. ரெண்டு மாசத்துல சிறுமளஞ்சி கோவில் கொட வருதுடே.. இந்த தடவயாவது வந்துரு..’’ என்று இன்று காலை போன் செய்து கொடைவிழாவுக்கு அழைத்த நண்பனின் குரல்.. எங்க ஏரியா மாயனை நினைவுப்படுத்திவிட்டது. கோடைகாலம் வந்தால்போதும்.. ஒவ்வொரு ஊரிலும் கொடைக்கு ரெடியாகிவிடுவார்கள். பல இடங்களில் புலம்பெயர்ந்து நிற்கும் உறவுகள் ஒன்றாக சந்தித்து விருந்து சாப்பிடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட மேட்டர் தான் கொடை என நினைக்கிறேன்.

ஒவ்வொரு முறையும் நண்பன் கொடைவிழாவுக்கு கூப்பிடுவான். வேலை காரணமாக போக முடியாமலாகிவிடும்.. இப்போது கொடைவிழா எப்படி நடத்தப்படுகிறது என்று தெரியவில்லை. சும்மா அனுபவத்திற்காக இந்த முறையாவது போகலாம் என்று யோசித்திருக்கிறேன்.. :)


                                                                                    --- கார்ட்டூனிஸ்ட்.பாலா

You may also like