Friday, February 4, 2011

ஊடல்...

என்னுடன் நீ பேச மாட்டாயாமே..
அதை உன் விழிகளிடம் சொல்லவில்லையா?பிடித்ததை கண்சிமிட்டியும்
பிடிக்காததை புருவம் உயர்த்தியும்
எனக்குத் தெரிவிக்கிறதே...

சமாதானமாக நான் பேசும்போதெல்லாம்
செவிகளை எனக்கும்
விழிகளை சுவற்றுக்கும் கொடுக்கிறாய்..
 
அருகிருந்தும் கைபேசி தூதுப் பறவையாகிப் போகிறது..
என்னிடமிருந்து 'லவ் யூ'வும்
உன்னிடமிருந்து 'ஹேட் யூ'வும்
பரிமாறப்படுகிறது..
 
பேசும் நேரங்களை விட
பேசாத நேரங்களில்
காதல் வெகுவாகப் பிரதிபலிக்கிறது நமக்குள்..

'
சாப்பிடு' என்று நான் கெஞ்சவேண்டும்
என்பதற்காகவே ..
பசியோடு காத்திருக்கிறாய்..
கோபம் எனும் சாயம் பூசிக்கொண்டு.
 
பின்கூட்டி அணைக்கிறேன்..
பிடிக்காதது போல உதறுகிறாய்..
இறுக்காத பிடியிலும் கூட
இறுகியதாய் தடுமாறுகிறாய்..
ஏனோ தெரிவதில்லை..
உன்னை செல்லமாக சீண்டும் தருணங்களில்
நான் இருமடங்கு காதல் வயப்படுகிறேன்..
 
உனக்குப் பிடிக்காத சேனல் மாற்றி
உன்னை வெறுப்பெற்றுகிறேன்..
பதிலுக்கு பழிவாங்குவதாக அணைக்கிறாய்..
தொலைக்காட்சியை..
 
எனது சேஷ்டைகளைப்
போலியாக வெறுக்கும்
உன் நடிப்பு
ஆஸ்கரையும் மிஞ்சும்..
 
உன் குழந்தைத் தனமான கோபங்களில்
அவ்வப்போது கரைந்து தான் போய்விடுகிறேன்..
என்னென்னவோ கோமாளித்தனங்கள் செய்து
ஒருவழியாக உன் மௌனத்தை கலைத்துவிட்டேன்..
'
பழம்' என்று சிறுவர்கள் விரல் நீட்டி சொல்வது போல..
 
ஆனாலும் மீண்டும் காத்திருக்கிறேன்..
நமக்குள் சுவாரஸ்யமாய் அரங்கேறும்
ஊடல் எனும் நாடகத்திற்காக..
-- இந்திரா

No comments:

Post a Comment

You may also like